தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி-யைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகளில் நிலவிய சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், அனுபவ விதிகளில் தளர்வு அளித்தும், தேர்வுக் குழுவில் தமிழக அதிகாரிகளை இணைத்தும் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
தமிழக டிஜிபி நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி யூடியூபர் கிஷோர் கே.சாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நாங்கள் டிஜிபி பதவிக்கான பெயர்களைப் பரிந்துரை செய்தும், யுபிஎஸ்சி (UPSC) விதிகளால் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. டிஜிபி-யாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் சட்டம் ஒழுங்கு, உளவுத்துறை உள்ளிட்ட 4 குறிப்பிட்ட பிரிவுகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற புதிய விதியால், திறமையான பல மூத்த அதிகாரிகளின் பெயர்கள் விடுபடுகின்றன. மேலும் தேர்வுக் குழுவில் மாநில அதிகாரிகள் இடம்பெறுவதிலும் சிக்கல் உள்ளது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இரட்டை இலையுடன் தாமரை நிச்சயம் மலரும்! பாஜக செய்தி தொடர்பாளர் அதிரடி!
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக டிஜிபி நியமனத்தைச் சுமுகமாக முடிக்கப் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தனர். அனுபவ விதியில் தளர்வு: சட்டம் ஒழுங்கு, உளவுத்துறை உள்ளிட்ட பிரிவுகளில் 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழகத்திற்கு மட்டும் தற்போதைக்குத் தளர்த்துவதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதன் மூலம் தகுதியுள்ள மூத்த அதிகாரிகள் பலரின் பெயர்கள் பரிசீலனைக்கு வரும்.
டிஜிபி தேர்வுக்கான குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அதில் ஒருவர் தலைமைச் செயலாளர். தற்போது டிஜிபி இல்லாத பட்சத்தில், டிஜிபி அந்தஸ்தில் உள்ள மற்றொரு மூத்த அதிகாரியை தேர்வுக் குழுவில் இணைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு வார கால அவகாசம்: இந்தத் தளர்வுகளின் அடிப்படையில், தகுதியான அதிகாரிகளின் பட்டியலை ஒரு வாரத்திற்குள் யுபிஎஸ்சி-க்கு (UPSC) தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, கிஷோர் கே.சாமி தரப்பில், "தமிழக அரசு நிரந்தர டிஜிபி-யை நியமிக்காமல் 'Acting DGP' (பொறுப்பு டிஜிபி) முறையைத் தொடர்ந்து வருவது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்" என வாதிடப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவின் மூலம், இன்னும் சில வாரங்களில் தமிழகத்திற்குப் புதிய நிரந்தர டிஜிபி கிடைப்பதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு? சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய 7 பேர் கொண்ட குழு!