தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரதமர் மோடியின் ‘டபுள் இன்ஜின்’ கூட்டணி ஆட்சி அமையும் என்றும், திமுக நடத்துவது பூத் முகவர்கள் மாநாடு அல்ல, அது ‘பணப்பட்டுவாடா பயிற்சி’ மாநாடு என்றும் பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் விமர்சித்துள்ளார்.
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பட்டினத்தில் 2026 தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான "மக்களுக்காக மக்களிடமிருந்து கருத்து கேட்கும் நிகழ்வு" இன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டாக்டர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துப் பெட்டியைத் திறந்து வைத்தார்.
மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டமே தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டது. வரும் தேர்தலில் தமிழகத்தில் திமுக என்ற தீய சக்தியை வீழ்த்தி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாரதப் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலோடு 'டபுள் இன்ஜின்' அரசாங்கம் அமையும். செங்கல்பட்டு மாவட்டத்தில் இரட்டை இலையுடன் இணைந்து தாமரையும் இந்த முறை மலர்ந்தே தீரும்.
இதையும் படிங்க: விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு? சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய 7 பேர் கொண்ட குழு!
திமுக கூட்டணி இன்னும் முடிவாகாமல் இழுபறியில் உள்ளது. ராகுல் காந்தியிடம் திமுக அடிமை போல் பதுங்கிக் கிடக்கிறது. திருமாவளவன் போன்றவர்கள் பட்டியல் இன மக்களை திமுகவிடம் அடமானம் வைத்து அரசியல் செய்கிறார்கள். ஆனால், அவரே இன்று திமுகவை விமர்சிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அண்ணன் ராமதாஸ் போன்ற மூத்தத் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் திருமாவளவன் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது நடத்தி வரும் பூத் முகவர்கள் மாநாடு என்பது உண்மையில் முகவர்களுக்கானப் பயிற்சி அல்ல; அது தேர்தலின் போது எப்படிப் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்பதற்கானப் பயிற்சி மாநாடு. 234 தொகுதிகளிலும் ஆயிரம் கோடிக்கும் மேல் பணத்தைப் பதுக்கி வைத்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். ஆனால், மக்கள் ஏமாற மாட்டார்கள். கொளத்தூர் தொகுதியிலேயே ஸ்டாலின் வெற்றி பெறுவது இந்த முறை கடினம்" எனச் சாடினார்.
இந்நிகழ்வில் மாவட்டப் பொதுச் செயலாளர் அருண் கோதண்டம், மண்டலத் தலைவர்கள் ராஜ் நாராயணன், பிரபாகர், கன்னிவேல் மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!