புனித நதியான தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்களுக்கான சடங்குகள் என்ற பெயரில் ஆடைகள் மற்றும் கழிவுப் பொருட்களைக் கொட்டி மாசுபடுத்துவதற்குக் கடுமையான தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சிவனுபாண்டியன் என்பவர், பாபநாசம் அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ஆனந்தவிலாஸ் மண்டப ஆக்கிரமிப்பு தொடர்பாகத் தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனந்தவிலாஸ் மண்டபத்தை அருள்மிகு பாபநாச சுவாமி கோவில் நிர்வாகம் உடனடியாகத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். கோயிலின் செயல் அலுவலர், தொல்லியல் துறை அதிகாரிகளுடன் இணைந்து அந்த மண்டபத்தை அதன் பழமையான பாரம்பரிய வடிவத்திற்கு மீட்டெடுக்க உரிய அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.
இதையும் படிங்க: முதல்வருக்கு ஒரு நீதி, சீமானுக்கு ஒரு நீதியா? காவல்துறையை வெளுத்து வாங்கிய மதுரை உயர் நீதிமன்றம்!

தொடர்ந்து, தாமிரபரணி ஆற்றின் தூய்மையைப் பாதுகாப்பது குறித்துக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், இறந்தவர்களுக்கான சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றை மாசுபடுத்துவதைத் தடுக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். ஆற்றில் ஆடைகள் மற்றும் பிற பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களைக் கொட்ட முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆற்றை மாசுபடுத்துவது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் எனப் பொதுமக்களுக்குப் பலகைகள் மூலம் கடுமையான எச்சரிக்கைகள் வழங்கப்பட வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் உடனடியாகத் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனக் கடுமையான உத்தர பிறப்பித்தனர்.
மேலும், அஸ்தியைக் கரைப்பது தொடர்பான வழிமுறைகளைத் தெளிவுபடுத்திய நீதிபதிகள், டாக்டர் பிக்கன்ஸ் தனது சாம்பலை வங்காள விரிகுடாவில் கரைக்க வேண்டும் என்று விரும்பியிருந்தார். அது, ஆறுகள் மற்றும் கடல்களின் நீருடன் இந்தியர்களுக்கு இருக்கும் ஆழ்ந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பைக் காட்டுகிறது. எனவே, சாம்பலை ஆற்றில் கரைக்க அனுமதி அளிக்கிறோம். ஆனால், அதற்கு ஒரு முக்கிய நிபந்தனை விதிக்கப்படுகிறது. சாம்பல், சுடப்படாத மண் பானைகளில் மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். பானைகள் சுடப்படாதவையாக இருந்தால், அவை உடனடியாக நீரில் கரைந்துவிடும். பானைகள் சுடப்பட்டிருந்தால், அந்தப் பானைகளை ஆற்றில் எறியக்கூடாது; சாம்பலை மட்டுமே கரைக்க வேண்டும் என்று நெறிமுறைகளை வகுத்து வழக்கை முடித்து வைத்தனர். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி வழங்குவது அரசின் கொள்கை முடிவு!