மதுரை மாநகர் கோரிப்பாளையம் ஹக்கிம் அஜ்மல்கான் சாலையில் அசோதா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக கடந்த 1930ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதுக்கோட்டை ராஜகுமாரர் தட்சிணாமூர்த்தி துரைராஜா துரைராணி என்ற அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த சொத்துகள் கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய மதுரை வடக்கு வட்டாட்சியர் அன்பழகன் மோசடியாக அதன் சொத்துரிமையை நீக்கி, இராமாயி ஆயியார் உள்ளிட்டோரின் பெயரில் சட்டவிரோதமாக பட்டா மாற்றம் செய்த புகாரில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அரசன் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், முன்னாள் வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கையும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கும் அப்போது பரிந்துரை செய்யப்பட்டது.
பின், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு, சொத்தின் மீது இடைக்காலத் தடையாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகும் நீதிமன்றத் தடையை மறைத்து 16.04.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளர் அனந்தராமன் மூலம் பொது அதிகார ஆவணம் பதிவு செய்யப்பட்டதாகவும், அதனடிப்படையில் 19.07.2021 அன்று திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சார்பதிவாளர் பிரசாந்த் சந்தான கருப்பன் மூலம் நில அடமானப் பத்திரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின் கீழ் புதுக்கோட்டையை சேர்ந்த இராமாயி ஆயியார், செந்தமிழ்ச் செல்வி, பிரேமா, ராஜ்குமார், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் VAO அரசன், முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், இளையராஜா, அனிஷ், அனந்தராமன், கவிதா, பிரகாஷ், காளிக்குமார் மற்றும் பிரசாந்த் சந்தான கருப்பன் ஆகிய 19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் அடுத்த திருப்பம்... மேலும் ஒருவரை தட்டித்தூக்கிய காவல்துறை...!
இந்த வழக்கில் கறம்பக்குடியை சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, திண்டுக்கல்லை சேர்ந்த காளிகுமார், துணை ஆட்சியர் அன்பழகன், ஆகிய 3 பேரை மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் ஆட்சியரின் உதவியாளரும், துணை ஆட்சியருமான அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'போலீஸ் சீருடையில் வந்தவர்கள் பணம் பறித்தனர்'! பாஜ மாநில செயலாளர் ராம. சீனிவாசன் பரபரப்பு புகார்!