பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதான சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் வெள்ளத்துறை, சேதுபதி ஆகியோர் ஜாமின் மனுக்கள் மீதான விசாரணையை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல் வெள்ளத்துறை, சேதுபதி ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஜூலை 6 முதல் 11 வரை பொறுப்பு சார் பதிவாளராக பணிபுரிந்தேன். அப்போது முந்தைய சார் பதிவாளர் உயர் நீதிமன்ற உத்தரவுபடி குறிப்பிட்ட நிலத்தை 3.7.2026ல் பதிவு செய்த பதிவு நடைமுறையை முழுமையாக முடிக்காமல் சென்றிருந்தார். நான் அதை நிறைவு செய்தேன்.
இதையும் படிங்க: பூதாகரமாக வெடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்..! சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அதிரடி கைது..!!
இந்நிலையில் பழனி கோயில் நிலத்தை தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாக என் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். என்னை கைது செய்தனர். கடந்த 13 நாளாக சிறையில் இருந்து வருகிறேன். எனக்கு இருதயத்தில் அடைப்புள்ளது. பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பழனி கோயில் நிலப் பிரச்சினை தனி நபர்களுக்கும், அறநிலையத்துறைக்கும் இடையிலானது. சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான உரிமையியல் வழக்கில் அறநிலையத்துறை தோல்வியடைந்தது. இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுபடி பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது. இதில் சார் பதிவாளரின் பங்கு என்பது மிகக்குறைவே. இருப்பினும் எந்த காரணமும் இல்லாமல் என்னை வழக்கில் சேர்த்து கைது செய்துள்ளனர். மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு ஆக. 17ல் தள்ளுபடியானது. எனவே ஜாமீன் வழங்க வேண்டும். என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ,அரசு தரப்பில் இந்த மோசடிக்கு பின்னால் இருப்பவர்களை கண்டறிய வேண்டும் . திட்டமிட்டு மோசடி நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மேலும் பதிவாளர் பாலசுந்தர் விடுப்பில் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார். ஜஸ்டின் மணிகண்டன் பத்திரப்பதிவு செய்ய உடன்பட்ட காரணத்தினாலேயே அவர் அங்கு பொறுப்பு பதிவாளராக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார் என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில், இருதய நோயாளிகளாக உள்ளனர்.தனியார் மடத்திற்கு சொந்தமான சொத்து எனவே தவறாக வழக்கு பதிவு செய்துள்ளனர் என வாதிட்டனர். இதைத் தொடர்ந்து தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்
இதையும் படிங்க: டிக்... டிக்... டிக்.! பழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!