தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திருவள்ளூரில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். பாஜக மற்றும் அதிமுக கூட்டணியைத் தரைமட்டமாகச் சாடிய அவர், வடக்கில் இருந்து வரும் ஆபத்தைத் தடுத்து நிறுத்தும் தேர்தலே இது என முழங்கினார்.
தமிழகத்தின் பண்பாட்டையும் அரசியலையும் இணைத்துப் பேசிய முதலமைச்சர் தமிழ்நாட்டில் கிராம தெய்வங்கள் பலவும் வடக்கு நோக்கியே அமைந்திருக்கும். ஏனென்றால், வடக்கில் இருந்துதான் தமிழ்நாட்டுக்கு ஆபத்து வரும் என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள். அந்த ஆபத்துதான் இன்று NDA என்ற பெயரில் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஸ்டாலினும், திமுகவும் இருக்கும் வரைக்கும் உங்களால் தமிழ்நாட்டைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது எனச் சவால் விடுகிறேன்.
பாஜகவின் மும்மொழிக் கொள்கை மற்றும் அதிமுகவின் நிலைப்பாடு குறித்துச் சாடிய அவர் அதிமுக ஆட்சிக்கு வந்தால் மும்மொழிக் கொள்கையை மீண்டும் கொண்டு வருவோம் எனப் பாஜகவினர் பேசி வருகின்றனர். இதைக் கேட்டுக்கொண்டு வாய் மூடி இருக்க நாங்கள் ஒன்றும் அதிமுகவைப் போல அடிமைச் சாமி கிடையாது. எடப்பாடி பழனிசாமி கொடுக்கும் தைரியத்தில்தான் பாஜக இங்கே ஆட்சி அமைக்கக் கனவு காண்கிறது எனச் சீறினார்.
இதையும் படிங்க: சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ! நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் வாக்கு சேகரிப்பு!

மக்களை நோக்கி வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின் இந்தத் தேர்தலில் மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், தமிழகத்திற்குள் நுழையத் துடிக்கும் NDA கூட்டணிக்கு 'No Entry' போர்டாக இருக்க வேண்டும். பழனிசாமி ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி வெறும் 0.07% ஆக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று நம் ஆட்சியில் 11.19% வளர்ச்சி கண்டு, இந்தியாவிற்கே தமிழ்நாடு 'ரோல் மாடல்' மாநிலமாகத் திகழ்கிறது எனப் புள்ளிவிபரங்களுடன் விளக்கினார்.
மத்திய அரசின் நிதிப் பகிர்வு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு குறித்துப் பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டினார். திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பாசிச சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும் என அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சரின் இந்த ஆவேசமான பேச்சு திமுக தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழக பாஜக தொண்டர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்! பிரதமர் மோடி புகழாரம்!