விருதுநகர் மாவட்டம் அனுப்பன்குளம் மற்றும் விழுப்பனூர் கிராமப் பகுதிகளில் செயல்பட்டு வந்த தனியார் வெடிபொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவிகளையும் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் அனுப்பன்குளம் கிராமம் மற்றும் திருவில்லிபுத்தூர் வட்டம் விழுப்பனூர் கிராமம் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் இன்று (செப்டம்பர் 3) வழக்கம்போல் தொழிலாளர்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகப் பயங்கர வெடி விபத்துகள் நிகழ்ந்தன. இதில் பணியிலிருந்த வத்திராயிருப்பு வட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (56) மற்றும் சிவகாசி வட்டம் சிலோன் காலனியைச் சேர்ந்த சக்திவேல் (55) ஆகிய இருவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், விழுப்பனூர் கிராமத்தில் நடந்த விபத்தில் சிக்கிக் கடுமையான தீக்காயமடைந்த காளிராஜ் (49) சிவகாசி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுடன் லேசான காயமடைந்த கருப்பாயி (47), மகாலட்சுமி (36), பவானி (49) மற்றும் இருளாயி (70) ஆகிய பெண் தொழிலாளர்களும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் உயர்தரச் சிறப்பு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பூட்டியிருந்த பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து! ரூ.20 லட்சம் பட்டாசுகள் எரிந்து சாம்பல்! போலீஸ் விசாரணை!
விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ள நபருக்கு ரூ.1 லட்சமும், லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்குத் தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளதாகத் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செப்.17 CM விஜய் விருதுநகர் விசிட்.. காலை உணவு திட்டம் விரிவாக்கம்.. வேகம் காட்டும் பெண் அமைச்சர்கள்!!