திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் முகமூடி அணிந்து பைக் பயணித்த ஒரு கும்பல் நடத்திய தொடர் அரிவாள் வெட்டு தாக்குதல்கள் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மீது கண்ணில் பட்டவர்களைத் தாக்கும் கொடூர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், காவல் துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு 8 பேரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை ஞாயிற்றுக்கிழமை தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 28-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பிரம்மதேசம் பகுதியில் தொடங்கிய இந்த தாக்குதல் சரமாரியாக நீடித்தது. மர்ம கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியபோது மறுப்பு தெரிவித்ததால் அரிவாளால் வெட்டி தப்பியோடியது. அதே நாளில் வாகைக்குளம் பகுதியில் உள்ள ஒரு சிற்பக்கலை தொழிற்கூடத்துக்குள் நுழைந்த கும்பல், அங்கிருந்த ஊழியரின் மொபைல் போனைப் பறித்துச் சென்றது.

மறுநாள் மே 29-ம் தேதி மாலை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒரு திருமண விழாவுக்குள் புகுந்து கும்பல் அரிவாள் தாக்குதல் நடத்தியது. இதில் ஆறு பேர் படுகாயமடைந்தனர். திருமண மண்டபத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதலுக்குப் பின்னர் அதிவேகமாக பைக் மூலம் தப்பிச் சென்ற கும்பல், திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே தெற்குப்பட்டி பகுதியில் தங்களைத் தடுத்து கேட்ட ஒருவரையும் அரிவாளால் வெட்டியது.
இதையும் படிங்க: கோவை சிறுமியை சாக்லெட் கொடுத்து சீரழித்தது அம்பலம்! வெளியானது காம கொடூரர்களின் குற்றப் பின்னணி!
இந்த தொடர் சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதால் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட காவல் துறையினர் ஒருங்கிணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் பலனாக மே 30-ம் தேதி 3 சிறுவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இன்னும் தலைமறைவாக இருந்த நெட்டூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை ஞாயிற்றுக்கிழமை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது ஐயப்பன் போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்தியதால், தற்காப்புக்காக போலீசார் அவரைச் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசாரும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவட்டங்களில் பீதியை ஏற்படுத்திய இந்த அரிவாள் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறுமி உடல் மீட்கப்பட்ட ஏரிக்கரையில் ஏடிஜிபி ஆய்வு! துவங்கியது உடற்கூராய்வு பணி! வெளிவரப்போகும் பகீர்!