இஸ்ரேல், ஈரான் மோதலால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் தொற்றி இருக்கிறது. நேற்று முன்தினம் அதிகாலையில் திடீரென ஈரான் மீது இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. ஈரானின் அணு உற்பத்தி மையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. அணு ஆயுதம் தயாரிப்பதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஈரான், தனது அணு உற்பத்தி கூடங்களின் முக்கிய கட்டமைப்புகளை இழந்தது.
அதே போல் ராணுவ தளங்களிலும் மிகப்பெரிய சேதம். கொத்து கொத்தாக வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈரானின் உச்ச தலைவர் கமெனிக்கு அடுத்த இடத்தில் இருக்கும், ஈரானின் அனைத்து வடிவிலான ராணுவத்தின் தலைமை தளபதி முகமது ஹூசைனை இந்த தாக்குதலில் இஸ்ரேல் கொன்று விட்டது.

இது தவிர இரண்டு முக்கிய படை பிரிவின் தலைமை தளபதிகளும், 2 முக்கிய அணு விஞ்ஞானிகளும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: பற்றி எரியும் போர் பதற்றம்.. ஈரான் - இஸ்ரேல் தலைநகரங்களுக்கு நீடிக்கும் ஆபத்து!
இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமே ஈரானின் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சி தான். இது ஈரானின் எதிரி நாடுகளான அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பிடிக்கவில்லை.தங்கள் நாடுகளை ஈரான் அச்சுறுத்தக்கூடும் என்பதால், அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை முறியடிக்க இரு நாடுகளும் களம் இறங்கின.ஈரானை அமெரிக்கா பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்த ஈரான் ஒப்புக்கொண்டது.
அணு ஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் போட வேண்டும் என்று டிரம்ப் நிர்பந்தம் செயதார்.ஆனால் அதை ஈரான் ஏற்கவில்லை. இதனால் பல கட்டமாக நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. ஈரான் பேச்சு வார்த்தையில் உடன்படவில்லை என்றால், இஸ்ரேல் நிச்சயம் தாக்குதல் நடத்தும் என்று டிரம்ப் சொல்லி இருந்தார்.

எப்படியாவது ஈரானின் மொத்த அணு ஆயுத திட்டங்களையும் தகர்க்க வேண்டும் என்பது இஸ்ரேலின் பல ஆண்டு கனவு. ஆனால் அமெரிக்காவிடம் இருந்து க்ரீன் சிக்னல் வராமல் இருந்தது. ஈரானுடனான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததும், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்ததும் அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா, தங்களுக்கு இதில் தொடர்பில்லை என்று ஒதுங்கி கொண்டது.
இது முழுக்க முழுக்க இஸ்ரேலின் முடிவு. தங்கள் மக்களை காக்க சுயமாக அந்த நாடு முடிவெடுத்து தாக்கதல் நடத்தி இருக்கிறது என்று அமெரிக்கா சொல்லி இருந்தது. இதை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. 100க்கும் அதிகமான ட்ரோன்களை ஏவி விட்டது. அதை இஸ்ரேல் முறியடித்தது. அடுத்த கட்டமாக மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில் திடீரென டிரம்ப் அளித்த பரபரப்பு செய்தி ஈரானை தூக்கி வாரி போட்டு இருக்கிறது. இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரான் மீதான தாக்குதலுக்கும், அமெரிக்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஈரானால் நாம் எந்த வகையிலும் தாக்கப்பட்டால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும் வலிமையும் இதற்கு முன் கண்டிராத அளவில் பதிலடி கொடுக்கும். இருப்பினும், ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தத்தை எளிதாகச் செய்து, இந்த ரத்தக்களரி மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இஸ்ரேல் வீசிய ஏவுகணை.. டெஹ்ரானில் தகதகவென பற்றி எரியும் எண்ணெய் கிடங்குகள்..!