சென்னை: பள்ளிகள் திறப்பின்போது முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவுத் திட்டம் தொடருமா என செய்தியாளர்கள் அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், “எந்தத் திட்டத்தையும் நிறுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. யார் கொண்டு வந்த திட்டம் என்பதைப் பார்க்காமல் அனைத்து நல்ல திட்டங்களையும் வெற்றிகரமாகச் செயல்படுத்துவோம்” என்றார்.
ஆனால், பதில் அளித்த விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் செங்கோட்டையன், “அவர்கள் தானே அம்மா கிளினிக் திட்டத்தை நிறுத்தினார்கள். அதைப் பற்றி நீங்கள் கேள்வி கேட்டீர்களா? பத்திரிகைகளில் எழுதினீர்களா?” என்று எதிர்க் கேள்வி எழுப்பினார்.
மேலும், “அவர்கள் ஆட்சியில் பயந்துகொண்டு இருந்தீர்கள். இப்போது எங்களிடம் மட்டும் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள்” என்று செய்தியாளர்களை நோக்கி கூர்மையாகப் பேசினார். கோவை சிறுமி கொலை வழக்கில் விரைவாக தீர்ப்பு வரும் எனக் குறிப்பிட்ட அவர், “பாலியல் குற்றங்கள் நடைபெற்ற உடன் 24 மணி நேரத்தில் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கிறோமா இல்லையா எனப் பாருங்கள்” என்றார்.
இதையும் படிங்க: கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம சொல்லுறாரே...? - தனியார் மருத்துவமனையில் செக் அப் செய்ததற்கு செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்...!

ஊழல் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “ஊழல் நடந்தது, இவன் காசு வாங்கினான் என்று தைரியமாக எழுதுங்கள். ஆதாரத்துடன் எழுதினால் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என்று சவால் விட்டார். “கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால், குற்றத்தை சுட்டிக்காட்டி உதவி செய்யும் உரிமையும் உங்களுக்கு இருக்கிறதா?” என்று கேட்ட அமைச்சர், பேட்டியை திடீரென முடித்துக்கொண்டு, கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு எழுந்து சென்றார்.
இந்த சம்பவம் அரசியல் மற்றும் ஊடக வட்டாரத்தில் பெரும் பேச்சுக்குரியதாக மாறியுள்ளது. முந்தைய ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் தற்போதைய அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. அமைச்சரின் கடுமையான பதில்கள் த.வெ.க. அரசின் துணிச்சலான அணுகுமுறையை பிரதிபலிப்பதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் இதை அதிகாரத்தின் அலட்சியப் போக்கு என விமர்சிக்கின்றனர்.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் மீண்டும் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.300 கோடி மோசடி செய்த நபருடன் போட்டோ! வெடித்தது சர்ச்சை! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!