மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே, கடந்த 45 ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவுகிறது. இஸ்ரேலை தனி நாடாக ஏற்க ஈரான் மறுக்கிறது. அதை பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிப்பு பகுதி என்றே குறிப்பிடுகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை, 2023ல் இருந்து தீவிரமடைந்தது. அப்போது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
அதில் 1,200 இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக ஹமாஸ் படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா மீது போர் தொடுத்தார்.

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக ஈரான் உதவியுடன் லெபனானின் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளும் இஸ்ரேலை தாக்கினர். ஈரானும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலை ஒழித்துக்கட்ட ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
இதையும் படிங்க: எங்ககிட்ட மோதாதீங்க! எதிர்பார்க்காத அளவுக்கு பதிலடி இருக்கும்! ஈரானை கடுமையாக எச்சரிக்கும் ட்ரம்ப்..!
இதனால், ஈரானின் அணுகுண்டு தயாரிப்பு கட்டமைப்பை தாக்கி அழிக்க இஸ்ரேல் முடிவு செய்தது. ஏற்கனவே தங்கள் மொசாட் உளவு அமைப்பின் உதவியுடன் அணுசக்தி தளங்கள், ஏவுகணை உற்பத்தி மையங்கள், ராணுவ தளங்கள், படை தளபதிகளின் நடமாட்டம் ஆகியவற்றை கண்காணித்து திட்டம் வகுத்தது. அதன்படி, மொசாத் உளவாளிகள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுடன் ஈரானுக்குள் ஊடுருவினர். ஏராளமான ரகசிய தாக்குதல் தளங்களை நிர்மாணித்தனர்.

அதன் பிறகு, நேற்று முன்தினம் 'ஆப்பரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் தாக்குதலை இஸ்ரேல் துவங்கியது. நுாற்றுக்கணக்கான போர் விமானங்கள், ட்ரோன்கள் ஈரானுக்குள் பாய்ந்தன. ஈரானின் அணு ஆயுத தளங்கள், ராணுவ தளங்கள் மீது குண்டுமழை பொழிந்தன. முன்பே ரெடியாக இருந்த மொசாத் உளவாளிகள், ட்ரோன்களை ஆக்டிவேட்செய்து, ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை செயலிழக்க செய்ததால், இஸ்ரேலின் விமான தாக்குதல் எதிர்ப்பின்றி நடந்து முடிந்தது. மூன்று ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள் உட்பட 78 பேர் உயிரிழந்தனர். 320க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இஸ்ரேல் தாக்குதலுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்' என ஈரான் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு. இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து 150க்கு மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவியது. வான் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன் ஒலித்ததால் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர். இருப்பினும் ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்தன.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நேற்று தொலைபேசியில் அழைத்துப் பேசினார். சுமார் 50 நிமிடங்கள் நீடித்த அவர்களின் உரையாடலில் மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்ற நிலை குறித்து விவாதித்தனர். மேலும், உக்ரைனுடனான பேச்சுவார்த்தை குறித்தும் அவர்கள் உரையாடினர்.
இதையும் படிங்க: பற்றி எரியும் போர் பதற்றம்.. ஈரான் - இஸ்ரேல் தலைநகரங்களுக்கு நீடிக்கும் ஆபத்து!