ஈரான் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை துரித கதியில் முன்னெடுத்து வருகிறது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய இஸ்ரேல், ஆபரேஷன் ரைசிங் லயன் (எழுச்சி பெறும் சிங்கம்) என்ற பெயரில் ஈரான் மீது கடந்த வாரம் தாக்குதல் தொடுத்தது.
இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்தது. ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3" என்ற பெயரில் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான், இஸ்ரேல் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் குதித்தது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “கமேனியை கொல்வது ஈரான் - இஸ்ரேல் பிரச்சினையை அதிகப்படுத்தாது. மாறாக முடிவுக்கு கொண்டு வரும்” என்று பேசியிருந்தார்.
இதையும் படிங்க: இஸ்ரேல்-ஈரான் போரில் ஜெயிக்கப்போவது யார்? யாரின் கை ஓங்கி உள்ளது? சேதத்தில் சிக்கியது யார்? ஷாக் ரிப்போர்ட்..!

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், ‘ஈரானின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்.
அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை இப்போதைக்கு கொல்லப் போவதில்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனிக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் சவால் ஒன்றை விடுத்துள்ளார். அதில், "ஈரானின் அண்டை நாட்டைச் சேர்ந்த சர்வாதிகாரி ஒருவர் (ஈராக்கை சேர்ந்த சதாம் உசேன்), இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், அவருக்கு நேர்ந்த கதியை எண்ணிப் பாருங்கள்" என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொலை, சட்டவிரோதமாக சிறைபிடித்தல், நாடுகடத்தல், சித்ரவதை செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், சதாம் உசேன் மீது வழக்கு தொடரப்பட்டு 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 30-இல் தனது 69-ஆவது வயதில் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். இதேபோல ஈராக் தலைமை நீதிபதியான சதாம் உசேனின் ஒன்றுவிட்ட சகோதரரும் தூக்கிலிடப்பட்டார்.
இந்நிலையில் ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியை குறிவைப்பதற்கு எதிராக ஈராக்கின் ஷியா பிரிவின் மதகுரு அயதுல்லா அலி சிஸ்தானி எச்சரிக்கை விடுத்தார். மேலும் ஈரான் - இஸ்ரேல் போர் முழு பிராந்தியத்தையும் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து அயதுல்லா அலி சிஸ்தானி வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரானின் உச்ச மதத் தலைவரையும், அரசியல் தலைவரையும் குறிவைப்பது பிராந்தியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது பரவலான குழப்பத்தையும் தூண்டக்கூடும். இது பிராந்திய மக்களின் துன்பத்தை அதிகரித்து, அனைவரின் நலன்களுக்கும் கடுமையாக தீங்கு விளைவிக்கும்" என்று அவர் எச்சரித்தார்.
மேலும், “இந்த அநீதியான போரை முடிவுக்குக் கொண்டு வந்து ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு அமைதியான தீர்வைக் காண அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்” என்று சர்வதேச சமூகத்தை சிஸ்தானி வலியுறுத்தினார். ஈராக்கில் உள்ள கோடிக்கணக்கான ஷியா முஸ்லிம்களுக்கான மிக உயர்ந்த மதத் தலைவராக அயதுல்லா அலி சிஸ்தானி உள்ளார். ஈராக்கில் உள்ள பெரும் பகுதி மக்களை அணி திரட்டும் அதிகாரம் அவருக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரானை மொத்தமாக முடிக்க திட்டமிடும் ட்ரம்ப்.. களமிறங்கும் அமெரிக்க படைகள்.. மூன்றாம் உலகப்போர் துவக்கமா?