பகை நாடுகளான ஈரானும் இஸ்ரேலும் கடந்த வெள்ளிமுதல் சண்டையிட்டு வருகின்றன. அணு ஆயுத தயாரிப்பை கைவிட முடியாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்த நிலையில், அது தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு பேராபத்தாக முடியும் என கூறி முதலில் ஈரான் மீது தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்.
இதில் ஈரான் முக்கிய தளபதிகள், அணு ஆயுத விஞ்ஞானிகள் உட்பட 100க்கு மேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களால் எண்ணெய் கிணறுகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் தீப்பற்றி எரிந்தன.
பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் நகரங்கள் மீது தொடர்ச்சியாக ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் டெல் அவிவ் நகரிலுள்ள அமெரிக்க தூதரகமும் கூட கடும் சேதமடைந்தது. இந்த நிலையில் கனடாவில் ஜி7 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லைப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

உக்ரைன்–ரஷ்யா போர், இஸ்ரேல்-–ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.
இச்சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப், திடீரென மாநாட்டில் இருந்து பாதியிலேயே அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அவர் கிளம்புவதற்கு முன்பாக, ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நான் சொன்ன ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்து போடாததை ஒருபோதும் ஏற்க முடியாது. டெஹ்ரானில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேறுங்கள் என கூறியிருந்தார். இதனால், இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரானை தாக்குமா? என்ற யூகங்கள் எழுந்தன.
ஆனால், ஜி7 மாநாட்டில் இருந்து டிரம்ப் வெளியேறியதற்கு வேறு ஒரு காரணத்தை சொல்கிறார், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தை ஜி 7 மாநாட்டில் டிரம்ப் முன்வைத்தார் என மாக்ரோன் கூறினார்.

டிரம்ப் பாதியிலேயே வெளியேறியது போர் நிறுத்தத்துக்கான பேச்சு வார்த்தை உடனடியாக துவங்கும் என்பதையே காட்டுகிறது. அதை ஈரானும் இஸ்ரேலும் ஏற்குமா? மத்திய கிழக்கில் உடனடியாக அமைதி திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை.
ஆனாலும் இஸ்ரேலிடம் பேசி போர் நிறுத்தத்துக்கு அதிபர் டிரம்ப் முயற்சிகளை மேற்கொள்வார்; அதனால், இப்போதைய பதற்ற நிலை தணியும் என நினைக்கிறேன். ஆனாலும், இஸ்ரேல், ஈரான் இடையே போர் தீவிரமாக நடந்து வருவதால், இரு நாடுகளிலும் மக்களை பாதுகாக்க வேண்டியது உலக நாடுகளின் முதன்மையான கடமை. மக்கள் வசிக்கும் இடங்களில் தாக்குதல் நடத்துவதை இரு நாடுகளுமே தவிர்க்க வேண்டும் என மாக்ரோன் கூறினார்.

மேக்ரான் கருத்துக்கு அதிபர் டிரம்ப் பதில் அளித்துள்ளார். விளம்பரத்தை விரும்பும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், நான், இஸ்ரேல்– ஈரான் போரை நிறுத்துவதற்காகத்தான் மாநாட்டில் இருந்து வாஷிங்டனுக்கு கிளம்பியதாக தவறாக சொல்லி இருக்கிறார். நான் எதற்காக வாஷிங்டனுக்கு செல்கிறேன் என்பதற்கான காரணம் பற்றி அவருக்கு தெரியாது.
நான் செல்வதற்கும் போர் நிறுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது, அதை விட மிகப்பெரிய விஷயம். வேண்டுமென்றே செய்தாலும், இல்லையென்றாலும், இமானுவல் எப்போதும் தவறாகவே புரிந்து கொள்கிறார். காத்திருங்கள் என்று அதிபர் டெனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..! இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!