ஈரான் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை துரித கதியில் முன்னெடுத்து வருகிறது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய இஸ்ரேல், ஆபரேஷன் ரைசிங் லயன் (எழுச்சி பெறும் சிங்கம்) என்ற பெயரில் ஈரான் மீது கடந்த வாரம் தாக்குதல் தொடுத்தது. இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்தது. ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3" என்ற பெயரில் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான், இஸ்ரேல் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் குதித்தது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “கமேனியை கொல்வது ஈரான் - இஸ்ரேல் பிரச்சினையை அதிகப்படுத்தாது. மாறாக முடிவுக்கு கொண்டு வரும்” என்று பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், ‘ஈரானின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்.
இதையும் படிங்க: காமெனி மேல் கை வைத்தால்.. ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கிய ஈராக்..! இஸ்ரேல், அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை..!
அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை இப்போதைக்கு கொல்லப் போவதில்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனிக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் சவால் ஒன்றை விடுத்துள்ளார். அதில், "ஈரானின் அண்டை நாட்டைச் சேர்ந்த சர்வாதிகாரி ஒருவர் (ஈராக்கை சேர்ந்த சதாம் உசேன்), இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், அவருக்கு நேர்ந்த கதியை எண்ணிப் பாருங்கள்" என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்த ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும், எனினும், இறுதி உத்தரவை அவர் இன்னும் பிறப்பிக்கவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிடுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க இருப்பதாகவும், அதன்பிறகு ட்ரம்ப் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: ஈரானுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம் என்ற கணிசமான வாய்ப்பு உள்ளது.

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா, இல்லையா என்பது குறித்து 2 வாரங்களில் அதிபர் டிரம்ப் முடிவு செய்வார். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும். வலிமையின் மூலம் அமைதியை உருவாக்கும் அதிபர். எனவே ராஜதந்திரத்திற்கான வாய்ப்பு இருந்தால் அதிபர் எப்போதும் அதை பயன்படுத்தி கொள்வார். ஆனால் அவர் பலத்தை பயன்படுத்த பயப்படவில்லை என்றார்.
இதனிடையே ஈரான் தாக்குதலை எதிர்கொள்ள ஏதுவாக அமெரிக்கா தனது கடற்படை பலத்தை மத்திய தரைக்கடல் பகுதியில் அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால், பல இடங்களில் உள்ள தனது போர்க்கப்பல்களை மத்திய கிழக்கு நோக்கி அமெரிக்கா நகர்த்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரேல்-ஈரான் போரில் ஜெயிக்கப்போவது யார்? யாரின் கை ஓங்கி உள்ளது? சேதத்தில் சிக்கியது யார்? ஷாக் ரிப்போர்ட்..!