அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ம் தேதி மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம் 242 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்றது. இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டினர், 1 கனட நாட்டினர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர். விமானம் வானில் பறக்கத் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே அகமதாபாத்தினுடைய மேக்காணி என்று சொல்லக்கூடிய நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி, 10 விமான பணியாளர்கள் உட்பட 241 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த 242 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவர் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.
இதையும் படிங்க: 1206 அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமானது.. விஜய் ரூபானி வாழ்க்கையில் சோக சம்பவம்..!
விமானம் விழுந்த கட்டடத்தில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் பலரும் உடல் கருகினர். மேகனிநகர் பகுதியில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்த 10 மருத்துவர்கள் உயிரிழந்தனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த 13 பொதுமக்களும் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 274 ஆக உயர்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 24 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகியதால் டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்கள் ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உடல்களை அடையாளம் காண்பதற்காக, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பரிசோதனை முடிந்து கடந்த 13ம் தேதி 6 உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. முன்னதாக டி.என்.ஏ. சோதனை செய்யாமலேயே நேரடியாக உறவினர்கள் அடையாளம் காட்டிய 8 உடல்கள் ஒப்படைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், இதுவரை 87 பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறவினர்களுடன் பொருந்தியுள்ளதாகவும், 47 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பலர் குஜராத்தின் ஜுனாகத், பாவ்நகர், கேதா, மெஹ்சானா மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நேற்று பிற்பகல் விஜய் ரூபானியின் டிஎன்ஏ ஒத்துப்போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விஜய் ரூபானியின் உடல் உள்ள சவப் பெட்டியின் மீது மூவர்ணக்கொடி போற்றப்பட்டு, காவலர்கள் சுமந்து வந்தனர். உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் ரிஷிகேஷ் படேல், ஹர்ஷ் சங்கவி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். விஜய் ரூபானியின் மனைவியும் அஞ்சலி செலுத்தியதையடுத்து, அவரது உடல் அங்கிருந்து ராஜ்கோட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து அவரது சொந்த ஊரில் இன்று மாலை 5 மணிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானியின் உடல்.. அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு!!