பிரயாக்ராஜ்: பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) இயக்குநர் விவேக் பன்சாலின் பிரயாக்ராஜ் பயண ஏற்பாடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திரிவேணி சங்கமத்தில் கங்கையில் நீராடி, அருகிலுள்ள கோவில்களில் வழிபடுவதற்காக திட்டமிட்டிருந்த அவர், அதற்காக அனுப்பிய சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தின் இயக்குநருக்கு இத்தனை ஆடம்பரம் தேவையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
விவேக் பன்சால் நேற்றும் இன்றும் பிரயாக்ராஜில் தங்க திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகளை செய்ய துறை ரீதியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. உயர் அதிகாரி என்பதால் தங்குமிட ஏற்பாடு வழக்கமானது தான்.
இதையும் படிங்க: கடலில் சீனா விரிக்கும் 'பயங்கர' வலை... 1,400 படகுகளுடன் மாஸ்டர் பிளான்... மிரளும் உலக நாடுகள்...!
ஆனால், கங்கையில் நீராடிய பின் உடலை துடைக்க டவல், சோப்பு, சீப்பு, கண்ணாடி, உள்ளாடை ஆகியவற்றை வாங்கி வைக்க உத்தரவிடப்பட்டது. ஆண்களுக்கு 6 செட், பெண்களுக்கு 2 செட் உள்ளாடை உள்ளிட்டவை படித்துறையில் தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. இதற்காக பி.எஸ்.என்.எல்.யின் 50 ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதுமட்டுமின்றி, தங்கும் ஹோட்டல் அறையில் உலர் பழங்கள், பழங்கள், முகச்சவரக் கிட், டவல், டூத் பேஸ்ட், பிரஷ், சோப், ஷாம்பூ, சீப்பு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவை தயாராக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்த சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் பரவியதும், “நஷ்டத்தில் இயங்கும் பி.எஸ்.என்.எல்.யில் இத்தனை ஆடம்பரம்? 50 ஊழியர்களை சோப்பு-உள்ளாடை வாங்க அனுப்பலாமா?” என்று பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இதனால் ஏற்பட்ட பெரும் சர்ச்சையால், விவேக் பன்சாலின் பிரயாக்ராஜ் பயணம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு சென்றதைத் தொடர்ந்து, தொலைதொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளார். “இந்த ஆடம்பர ஏற்பாடுகளை ஒருபோதும் ஏற்க முடியாது. முறையற்ற, விதிமீறிய நடத்தை குறித்து விளக்கம் கேட்டு விவேக் பன்சாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் திருப்திகரமான விளக்கம் அளிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவம் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள உயர் அதிகாரிகளின் ஆடம்பர செலவுகள் குறித்து புதிய விவாதத்தை தூண்டியுள்ளது. பி.எஸ்.என்.எல்.யின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், இத்தகைய ஏற்பாடுகள் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிடாத கட்சிகளுக்கு எதற்கு முன்னுரிமை? தவெக மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்றம் கேள்வி!