உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பேருந்து ஒன்று 18 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்து சுக்குநூறானது. இந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள், காயமடைந்த 7 பேரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாயமான 10 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது..
இதையும் படிங்க: உத்தரகாண்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து... ஏழு உயிர்கள் பறிபோன சோகம்!
இந்த விபத்து குறித்து காவல்துறை தலைமையக செய்தித் தொடர்பாளர் ஐஜி நிலேஷ் ஆனந்த் பரானே வெளியிட்ட அறிக்கையில், ‘பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கோல்திர் பகுதியில் உள்ள அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்தது. பயணிகளை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு நடவடிக்கைக்காக மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்’ என்று அவர் கூறியுள்ளார்.

விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுக்கள் தீவிரமான மீட்புப் பணியில் இறங்கியுள்ளன. இருப்பினும் ஆற்றின் வேகமான நீரோட்டம் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதேபோல் கடந்தாண்டு நவம்பர் மாதம், உத்தரகாண்டின் அல்மோரா எல்லையில், ராம்நகரில் குபி அருகே 46 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 37 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?