பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான பதிலடியை கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் சென்றார்.
ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள வளைவு ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிறகு, தேசியக்கொடியை ஏந்தியபடி பாலத்தில் பெருமிதத்துடன் நடந்து சென்று பார்வையிட்டார்.

உலகின் மிக உயரமான ரெயில்வே வளைவு பாலம் என்ற பெருமைக்குரியது இந்த செனாப் வளைவு ரயில்வே பாலம். இதன் நீளம் 1315 மீட்டர். ரூ.1,400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை கட்டி முடிக்க சுமார் 30,000 டன் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரிசில் உள்ள ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரத்தில் இந்த ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பு. மலைப்பகுதியில் கடினமான பாறைகள் நிறைந்த இடத்தில் பல சவால்களுக்கு இடையே கட்டப்பட்டுள்ள செனாப் ரயில் பாலம் பொறியியல் துறையின் அதிசய படைப்பாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் நக்சல் வேட்டை.. ₹50 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட முக்கிய தலை உருண்டது..!

பூகம்ப அபாயம் கொண்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், நில அதிர்வு மற்றும் பலத்த காற்று போன்ற பேரிடர்களை தாங்கி நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செனாப் ரயில் பாலத்தை தொடர்ந்து, அன்ஜி கேபிள் ரயில் பாலத்தையும் (Anji bridge) பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது, இந்தியாவின் முதலாவது கேபிள் ரயில் பாலம் என்ற பெருமையை பெறுகிறது.
இந்த பாலத்திலும் நடந்து சென்ற பிரதமர் மோடி, பாலத்தை தாங்கிப்பிடிக்கும் கேபிளை அண்ணாந்து பார்ந்து வியந்தார். செனாப் ரயில் பாலம், அன்ஜி கேபிள் ரயில் பாலம் ஆகிய 2 முக்கிய பாலங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்ததன் மூலம் காஷ்மீரிலுள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதைத் திட்டம் நிறைவுக்கு வருகிறது. அத்திட்டத்தையும் பிரதமர் மோடி இன்று துவங்கி வைத்தார்.

உதம்பூர்–ஸ்ரீநகர்–பாரமுல்லா ரயில் திட்டம் 272 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. நீண்ட காலமாக நடந்து வந்த இந்த ரயில் திட்டத்தின்மூலம் ஜம்மு _ ஸ்ரீநகர் இடையே பயண நேரம் வெகுவாக குறையும். ஜம்மு, காஷ்மீரில் சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்புகள் பெருக உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் திட்டம் பெரிதும் உதவிகரமாக இருக்கும். ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரையிலான 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இந்தவந்தே பாரத் ரயில்கள் நாளை முதல் தனது பயணத்தை துவங்கும். தற்போது, ஜம்முதாவி ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. அது முடிந்ததும் இந்த வந்தே பாரத் ரயில்கள் ஜம்மு முதல் ஸ்ரீநகர் வரை இயக்கப்படும். பஹல்காம் தாக்குதல் மூலம் காஷ்மீர் வளர்ச்சியை தடுப்பதுதான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது என, காஷ்மீர் மக்களும் தலைவர்களும் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: மோடியும், ராகுல்காந்தியும் ஒண்ணு தான்! I.N.D.I.A கூட்டணிக்கு கும்பிடி போட்டு நடையை கட்டிய ஆம் ஆத்மி!