போரை நிறுத்தியது யார் என்பது குறித்து பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22இல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா மே 7இல் தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேலான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பின்னர் பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் இருநாட்டு எல்லைகளிலும் போர் பதற்றம் சூழ்ந்தது. இந்த போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில் திடீரென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போர் நிறுத்தப்பட்டதாக அறிவித்தார். இதன் பிறகுதான் மத்திய அரசும் தாக்குதல் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ச்சியாக தன்னால்தான் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது கூறி வருகிறார். இந்தப் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தது.

என்றாலும் தற்போது கூட 11 ஆவது முறையாக "இந்தியா - பாகிஸ்தான் மோதலை நாங்கள்தான் தடுத்து நிறுத்தினோம். இல்லை என்றால் அது அணுசக்தி பேரழிவாக முடிந்திருக்கும். ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு அணு ஆயுதங்களை பயன்படுத்தியும் இருப்பார்கள். அணு ஆயுதங்களை பயன்படுத்தும் நாடுகளுடன் எங்களால் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது என கூறினோம்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ப்ளீஸ் பதற்றத்தைக் குறைங்க.. நிதானமா இருங்க.. இந்தியா, பாகிஸ்தானுக்கு ஜி7 கூட்டமைப்பு அட்வைஸ்!

ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்துக்கு பிரதமர் மோடி நேரடியாகப் பதில் சொல்லவில்லை. இந்நிலையில் இந்த விஷயத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,”இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுத மோதலை நான்தான் தடுத்ததாக 21 நாட்களில் 11 ஆவது முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். ஆனால், அவரது நண்பர் நரேந்திர மோடி இதனை மவுனத்துடன் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். பிரதமர் ஏன் பேசவில்லை?. மோடி பொய் சொல்வதுபோல் ட்ரம்ப் பொய் சொல்கிறாரா? அல்லது அவர் 50% உண்மை பேசுகிறாரா?” என ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார
இதையும் படிங்க: பிறந்த பெண் குழந்தைக்கு தேசப்பக்தியால் சிந்தூரி பெயர்.. பீகார் தம்பதிக்கு குவியும் பாராட்டு