மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் ரிலீஸாக இன்னும் சில நாட்களே இருக்கிறது. பல்வேறு மொழிகளில் ஜூன் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகள் பல மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கர்நாடகாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல், தமிழில் இருந்து தான் கன்னடம் வந்ததாக கூறினார். இது பெரும் சர்ச்சையாக மாறியது. கமலின் இந்த பேச்சுக்கு கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், தாய்மொழியை நேசிக்க வேண்டும். ஆனால் அதற்காக பிற மொழிகளை அவமதிப்பது அநாகரீகமான செயல். குறிப்பாக கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்துள்ள நடிகர் கமல்ஹாசன், தனது தமிழ் மொழியை போற்றுவதற்காக நடிகர் சிவராஜ்குமாரையும் சேர்த்து கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவம் மற்றும் ஆணவத்தின் உச்சம். ஒரு மொழியிலிருந்து எந்த மொழி பிறந்தது என்பதை வரையறுக்க கமல்ஹாசன் வரலாற்றாசிரியர் அல்ல.
இதையும் படிங்க: உண்மையை உணராத கூட்டம் அவரை எதிர்க்கிறது... கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமான்!!

2,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது கன்னட மொழி. தென்னிந்தியாவிற்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கமல்ஹாசன், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இந்து மதத்தை அவமதித்து, மத உணர்வுகளைப் புண்படுத்தி வருகிறார். இப்போது, 6.5 கோடி கன்னடர்களின் சுயமரியாதையை புண்படுத்தி கன்னடத்தை அவமதித்துள்ளார். கமல்ஹாசன் உடனடியாக கன்னட மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, பெங்களூரில் ஒட்டப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசனின் தக் லைப் படத்தின் பேனரை கன்னட அமைப்பினர் கிழித்து அகற்றினர்.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே கன்னட மொழி தொடர்பாக நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்கப்படும் என்று அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்துள்ளார். கமல்ஹாசனின் கருத்தை கன்னட மக்கள் ஒருபோதும் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என்று கூறிய சிவராஜ் தங்கடகி, தக் லைஃப் படத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொள்ளாட்சி வழக்கு; பெண்கள் வணங்கி போற்றத்தக்கவர்கள்... பாராட்டி தள்ளிய கமல்ஹாசன்!!