நாடு முழுவதும் 19 லட்சம் பேருக்கு ஒரு நீதிபதி என்ற கணக்கில்தான் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன, நீதிமன்றங்களில் நிரப்பப்படாத நீதிபதிகளின் காலியிடங்கள் அதிகமாக உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் தற்போது 36 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர், ஆனால், 24 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. அதாவது 40 சதவீத நீதிபதிகள் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மட்டும் 1.34 லட்சம் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. தேசிய அளவில் 25 உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் எண்ணிக்கை என்பது 1114.ஆனால், இதில் 769 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர், 345 நீதிபதிகள் ஓய்வு பெற்றதால், 30 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த 769 நீதிபதிகள்தான் உயர் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள, 62 லட்சத்து 96 ஆயிரத்து 798 வழக்குகளையும் தீர்க்க வேண்டிய பொறுக்குள்ளாவார்கள். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மட்டும் அதிகபட்சமாக 80 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்கு மொத்தம் 160 நீதிபதிகள் இருக்க வேண்டும். இதன் காரணமாக 11 லட்சத்து 76 ஆயிரத்து 229 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தேசிய நீதிமன்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மொத்தம் நீதிபதிகள் எண்ணிக்கை 85, இதில் 32 இடங்கள் காலியாக உள்ளன.
இதையும் படிங்க: உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 12% பேர் மட்டுமே சொத்துப் பட்டியல் வெளியிட்டனர்.. சென்னையில் நிலவரம் எப்படி..?
சிக்கிம், மேகாலயா உயர் நீதிமன்றங்களில் மட்டும்தான் நீதிபதிகள் காலியிடங்கள் இல்லை. 2019ம் ஆண்டைத் தவிர்த்து, உயர் நீதிமன்றங்கள் 23 லட்சத்து 53 ஆயிரத்து 736 வழக்குகள் பதிவான நிலையில் அதில் 22 லட்சத்து 01, 442 வழக்குகள் முடிக்கப்பட்டன. 2024ம் ஆண்டில் 24,06,178 வழக்குகள் பதிவான நிலையில், அதில் 22 லட்சத்து 57ஆயிரத்து 971 வழக்குகள் தீர்க்கப்பட்டன.

இப்போதுள்ள சூழலில் நாட்டில் 18.70 லட்சம் மக்களுக்கு ஒரு நீதிபதி என்ற ரீதியில் மட்டுமே உள்ளனர். மாநிலங்களவையில் கடந்த 3ம் தேதி மத்திய அமைச்சர் அர்ஜூன் மேக்வால் அளித்த பதிலில் “150 உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணி அமர்வு என்பது பல்வேறு நிலைகளில் இருக்கிறது. உச்ச நீதிமன்ற கொலிஜியம் மற்றும் மத்திய அரசுக்கு இடையே பணியிட அமர்வு செயல்முறை இருக்கிறது. 205 பணியிடங்களுக்கு நீதிபதிகள் பரிந்துரை என்பது உயர் நீதிமன்றங்களின் கொலிஜியம் பரிந்துரையால் காத்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாதா.? ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சொல்வது என்ன?