காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். எல்லை தாண்டிய தாக்குதலால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது பதில் தாக்குதலை தொடுத்தது.

குறிப்பாக எல்லை மாநிலமான ஜம்மு காஷ்மீரில் பீரங்கி குண்டுகளை கொண்டு தாக்குதலை நடத்தியது. இதில் பூஞ்ச மாவட்டத்தில் பள்ளிகள், கடைகள், வீடுகள் சேதமடைந்தன. இதனால் இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவியது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. இதை அடுத்து ஏப்.25 ஆம் தேதி ஸ்ரீநகர் சென்ற ராகுல்காந்தி, பஹல்காம் தாக்குதலில் இறந்தோருக்கு ஆறுதல் கூறியிருந்தார். அதை தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாகிஸ்தான் ராணுவ டிரோன் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: முன்னாள் காங்., அமைச்சரின் உதவியாளர் கைது... பாக்.,க்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு; வெளியான முக்கிய தகவல்!!

அந்த கடிதத்தில், ‘நான் சமீபத்தில் பூஞ்ச் பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன். அங்கு பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்த திடீர் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல் பொது இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன. பல வருட கடின உழைப்பு ஒரே அடியில் பாழாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட பலர் கூறினர்.

பூஞ்ச் மற்றும் பிற எல்லைப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக அமைதியுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இன்று அவர்கள் இந்த ஆழமான நெருக்கடியைக் கடந்து செல்ல, அவர்களின் வலியைப் புரிந்துகொண்டு, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து உதவிகளையும் வழங்குவது நமது கடமையாகும். பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பூஞ்ச் மற்றும் பிற பகுதிகளுக்கு இந்திய அரசு ஓர் உறுதியான மற்றும் தாராளமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான நிதி உதவியை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிந்து நீர் ஒப்பந்தம் ரத்தின் தாக்கம் அடுத்த சில நாட்களில் தெரியும்... உண்மையை உடைத்த ஜெய்சங்கர்!!