புதுடில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் தொடக்க நிகழ்வில், சீன அதிபர் ஷி ஜின்பிங் சில நொடிகள் அசவுகரியமாக இருந்ததை கவனித்த பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை இடையில் நிறுத்தி அவரிடம் நலம் விசாரித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு செப்.12-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டின் தொடக்க நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது, மேடையில் அமர்ந்திருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் சில நொடிகள் அசவுகரியமாக இருப்பது போல் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே மேடையில் மோடி, புதின், ஜி ஜின்பிங்! இந்தியாவில் ஒன்று கூடும் உலக தலைவர்கள்! பிரதமர் ட்வீட் வைரல்!
இதனை கவனித்த பிரதமர் மோடி உடனடியாக தனது உரையை நிறுத்தினார். பின்னர் ஷி ஜின்பிங்கை நோக்கி அவர் நலமாக இருக்கிறாரா என விசாரித்தார். பிரதமர் கேட்டது ஷி ஜின்பிங்கிற்கு தெளிவாக கேட்காத நிலையில், அருகில் இருந்த மொழிபெயர்ப்பாளர் மூலமாகவும் அவரது உடல்நிலை குறித்து மோடி விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஷி ஜின்பிங் தனது தரப்பில் பிரச்சினை ஏதும் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் தலையசைத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னரே பிரதமர் மோடி தனது தொடக்க உரையை மீண்டும் தொடர்ந்தார்.
சில நொடிகளே நடைபெற்ற இந்த சம்பவம், மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, சர்வதேச அளவில் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தும் முக்கியமான மேடையில், சக நாட்டுத் தலைவரின் நிலையை கவனித்து பிரதமர் மோடி உடனடியாக பதிலளித்த தருணமாக இது பார்க்கப்படுகிறது.
எனினும், ஷி ஜின்பிங் ஏன் அசவுகரியமாக இருந்தார் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ காரணமும் வெளியாகவில்லை. சில நொடிகளுக்குப் பிறகு அவர் இயல்பாக இருந்ததுடன், மாநாட்டு நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்றன.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ள நிலையில், இரு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய தருணங்களில் ஒன்றாக இது பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: புதின், ஜின்பிங்கை சந்தித்த மோடி! சீன அதிபர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! கவனம் பெற்ற சந்திப்பு!