கட்சி பதவியையும், அமைச்சர் பதவியையும் இழந்து நிற்கும் பொன்முடிக்கு மீண்டும் ஜாக்பாட் அடிக்க உள்ளது. அவருக்கு மீண்டும் ஒரு பதவியை கொடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் இறங்கி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சைவ, வைண மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் பதவி, ஆட்சியில் அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி. விழுப்புரத்தின் முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டிருந்த அவர், தற்போது வெறும் எம்.எல்.ஏ. என்ற பட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி நிகழ்ச்சிகளில் கூட பெரிதாக தலைக்காட்ட முடியாத அளவிற்கு ஆளானார். பொன்முடியின் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்ட விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாலர் லட்சுமணன் விஸ்வரூப வளர்ச்சி காண ஆசைப்பட்டார்.

விழுப்புரம் கட்சி நிகழ்ச்சி பேனர்களில் கூட பொன்முடியின் புகைப்படம் தவிர்க்கப்பட்டது. துணை பொதுச்செயலாளர் அமைச்சர் என அனைத்து பதவிகளையும் இழந்ததால்தான் விழுப்புரத்தில் பொன்முடியின் செல்வாக்கு குறைவதாக அவரது ஆதரவாளர்கள் புலம்பி வந்தனர். ஆனால் பதவிகளை இழந்தாலும் பொன்முடி கட்சி தொடர்பாக அவதூறான கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை. இனி இப்படி எதுவும் சர்ச்சையாக பேச மாட்டேன் என ஸ்டாலினிடம் உறுதி கொடுத்து சமரசமாக போய்விட்டதாகவும் பேச்சிருக்கிறது.
இதையும் படிங்க: ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் எதற்கு? இதுதான் காரணமா? விளக்கம் அளித்த திமுக!!

ஜூன் மூன்றாம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது பொன்முடியும் உடன் வந்திருந்தார். இப்படி திமுக தலைமையிடம் பொன்முடியின் கிராப் மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விழுப்புறத்தின் அடையாளமாக உயர் பதவிகளில் பொன்முடி இருக்க வேண்டும் என்று திமுகவினர் விரும்புகின்றனர். அந்த இடத்தை பிடித்து அமைச்சரவைக்குள் நுழைய லட்சுமணன் முயற்சி செய்தாலும் பொன்முடியின் அனுபவத்தையும் கட்சி தலைமையுடனான நெருக்கத்தையும் தாண்டி அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை என்ற பேச்சு இருக்கிறது.

விழுப்புறத்தில் லட்சுமணன் கைகள் ஓங்கினாலும் பொன்முடி விவகாரத்தில் தலைமையிடம் அவர் மீது புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பொன்முடியிடம் மீண்டும் தலைமை கழக பொறுப்பை ஒப்படைக்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர். துணை பொதுசெயலாளர் பதவியின் எண்ணிக்கையை அதிகரித்து மீண்டும் அந்த பதவியையே கொடுக்கலாமா அல்லது புதிதாக பதவி உருவாக்கி கொடுக்கலாமா என ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக அறிவாலய வட்டாரத்தில் இருந்து செய்தி கசிந்துள்ளது.
இதையும் படிங்க: பெண்களை கேவலமா பேசுறவங்களுக்கு நட்சத்திரப் பேச்சாளர் பட்டம்... திமுகவை கழுவி ஊற்றிய வானதி சீனிவாசன்!!