மார்ச் 14ஆம் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பித்த நிலையில், வெளிநடப்பு செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களோடு செங்கோட்டையன் சேர்ந்து வெளிநடப்பு செய்யவில்லை. அது மட்டுமல்ல சட்டமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாக கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூட்டிய எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல சபாநாயகர் அப்பாவுவை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தார் செங்கோட்டையன்.

அதிமுகவுக்குள் இது பெரிய சலசலப்புகளை ஏற்படுத்திய நிலையில், நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளிலும் செங்கோட்டையன் சபாநாயகரை அவரது அறையில் சென்று தனியாக சந்தித்தார். அதன்பின் சட்டமன்றம் கூடியதும் செங்கோட்டையனிடம் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.பி.அன்பழகன், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் வேளாண் பட்ஜெட் வாசிக்கப்பட்டு கொண்டிருக்கும் போதே மெல்லிய குரலில் பேசினார்கள். அதற்குப் பிறகும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமலேயே புறப்பட்டு விட்டார்.
இதையும் படிங்க: அடிக்கடி வியட்நாமுக்கு சிட்டாகப் பறக்கும் ராகுல் காந்தி.. வியட்நாம் பாசம் குறித்து பாஜக சுளீர் கேள்வி!!
இந்த நிலையில்தான் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடியிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, ‘ அதை அவரிடமே போய் கேளுங்க’ என கோபமாக பதில் அளித்தார். இதற்குப் பிறகுதான் நேற்று மாலை ஒரு விழாவில் அவருடைய பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

''நான் ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன். அளந்து தான் பேச வேண்டும்’ என்று ஆரம்பித்த செங்கோட்டையன், தனக்கும் எம்.ஜி.ஆருக்குமான உறவு பற்றியும், எம்ஜிஆர் பற்றியும் விளக்கினார். எம்ஜிஆர் மறைந்த பிறகு அதிமுகவை ஜெயலலிதா எப்படி கட்டி காப்பாற்றினார் என்று விளக்கினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்காண்டு காலம் நல்லாட்சி நடத்தினோம் என்பதோடு அந்த விளக்கத்தை முடித்துக் கொண்டார் செங்கோட்டையன். அப்போது முதல்வராக இருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை கூட அவர் உச்சரிக்கவில்லை.

இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக செங்கோட்டையனை முன்னிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது.தமிழகத்தின் சீனியர் அரசியல் தலைவரான செங்கோட்டையனை, முதல்வர் வேட்பாளராக ஏற்கவும், அவருக்காக பிரசாரம் செய்யவும் அண்ணாமலை சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதிமுக, பாஜக, பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, தேமுதிக, புதிய தமிழகம், ஐஜேகே, தமாகா, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம் என ஒரு பிரமாண்டமான அணியை அமைத்து, திமுக கூட்டணியை வீழ்த்த டெல்லி வியூகம் அமைத்துள்ளது.

இந்த பிரம்மாண்ட கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் மூன்று வருட காலத்திற்கு செங்கோட்டையன் முதல்வராக இருப்பார். 2029-ல், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் அமலுக்கு வருமானால், அந்தத் தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளராக அண்ணாமலை முன் நிறுத்தப்படுவார்.இறுதி காட்சிகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன'' எனத் தெரிவித்துள்ளார் அரசியல் விமர்சககரான அஸ்பையர் சுவாமிநாதன்.
இதற்கு பதிலடி கொடுத்து வரு அதிமுகவினர், ''அப்போ எடப்பாடி அணி எங்கே போகும் தவெகவுடனா? அப்படி பார்த்தால் தவெக + எடப்பாடி அணி எளிதில் ஆட்சியை பிடித்து விடுமே..! பிஜேபி என்ன சதி செஞ்சாலும் அதை அப்படியே ஏற்க தமிழர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா?'' என எகிறியடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழல்.. தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார்.? சந்தேகம் கிளப்பும் ஹெச். ராஜா.!