பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் மோதல் தொடர்ந்து வருகிறது. பாமக தலைவர் அன்புமணியை பதவி நீக்கம் செய்து, அவரை செயல் தலைவராக ராமதாஸ் நியமனம் செய்தார். அதுமட்டுமல்லாமல் அன்புமணி அவரின் தாயையே பாட்டிலை எடுத்து வீசி அடிக்க முயற்சித்தார் என்றும் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதன்பின் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் சமாதானம் மேற்கொள்ள நிர்வாகிகள் முயற்சித்து வந்தனர்.

இந்த நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இன்று திடீரென ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பாமகவில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக விரைவில் சுமுகத் தீர்வு கிடைக்கும்.
இதையும் படிங்க: உங்க விருப்பம் நிறைவேறும்...சூசகமாக காய் நகர்த்திய ராமதாஸ்!

உங்கள் விருப்பம் நிறைவேறும். கூட்டணி பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல. ஆடிட்டர் குருமூர்த்தி அறிவார்ந்தவர். அவர் சொன்னால் நடக்கும் என்று நம்புகிறேன். அதனால் குருமூர்த்தி வந்து பேசினார். என்ன பேசினோம் என்பதை இப்போது சொல்ல முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் நினைக்கும் அணியில் நான் இருப்பேன். கூட்டணி தொடர்பாக அனைவரும் கலந்து பேசி விரைவில் முடிவு எடுப்போம்.

முடிந்துபோனதை பேச வேண்டாம். முகுந்தன் விவகாரம் முடிந்துபோன விஷயம். இனி நடக்கப் போகும் விஷயங்களைப் பற்றி பேசுவோம். கமல்ஹாசனின் கன்னட சர்ச்சை விவகாரம் குறித்து நான் பதில் கூறுவது நன்றாக இருக்காது. தீர்வு இல்லாமல் எதுவும் இல்லை என்றார். மேலும், அன்புமணிக்கு மீண்டும் பாமக தலைவர் பதவி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, ‘பேசுவோம்’ என்று பதில் அளித்தார்.
இதையும் படிங்க: திடீரென சென்னை விரையும் ராமதாஸ்... போகிற போக்கில் சொன்ன முக்கிய செய்தி...!