உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா 2014ல் கைப்பற்றியது. கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகும் ரஷ்யா இருந்து வருகிறது. இது போன்ற காரணங்களால் ரஷ்யாவை உக்ரைன் எதிர்க்க தொடங்கியது. 2022 பிப்ரவரியில் இரு நாடுகளும் சண்டையிட தொடங்கி அது போராக மாறி இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 3 ஆண்டுக்கும் மேலாக நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் முயன்று வருகின்றன.

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக கடந்த வாரம் துருக்கி நாட்டில் ரஷ்யா – உக்ரைன் தூதுக் குழுவினர் அளவில் அமைதிப் பேச்சு நடந்தது. இதில் போர் நிறுத்தம் குறித்த எந்த முடிவும் எட்டப்படவில்லை. இரு தரப்பிலும் தலா ஆயிரம் போர் கைதிகளை விடுவிப்பது என்ற அளவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டன.
இதையும் படிங்க: உக்ரைன் கொடுத்த மரண அடி.. வெளவெளத்துபோன ரஷ்யா.. 40 போர் விமானங்கள் சிதைப்பு..!

இந்த நிலையில் உக்ரைனின் முக்கிய பகுதிகள் மீது ரஷ்யா மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியது. மத்திய கிவ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் ஆகிய பகுதிகளில் 273 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 4 வயது குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைனுடனான போர் தொடங்கியது முதல் மிகப்பெரிய டிரோன் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று ரஷ்யாவின் விமானப்படை தளங்களை குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன்கள் தாக்குதலை நடத்தியது. உக்ரைன் எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு சைபீரியாவின் ஸ்ரீட்னியில் Sridni உள்ள ரஷ்ய ராணுவ தளத்தை ட்ரோன்கள் தாக்கின. இது சைபீரியாவில் நடக்கும் முதல் தாக்குதல்.

இதுமட்டுமல்ல, ஓலென்யா, பெலாயா(Olenya, Belaya) உட்பட 4 இடங்களில் உள்ள விமான தளங்களை குறிவைத்து ஒரே நேரத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தி இருக்கிறது. இதில் 40க்கு மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் தாக்கப்பட்டதாக உக்ரைன் ஊடகங்கள் கூறுகின்றன.நீண்ட தூரம் சென்று குண்டுகள் வீசும் எதிரிகளின் விமானங்களை அழிக்கும் நோக்கில், ஆபரேஷன் ‘பவுட்டினா’ pavutyna என்ற பெயரில் உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறது.

இந்த சேதங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், உக்ரைன் ட்ரோன் தாக்குதலில் இதுதான் மிகப்பெரிய சேதமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இன்று ரஷ்யா– உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்பே தங்களது நிலைப்பாட்டை வரையறுத்துவிட்டதாக கூறியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை அடைவது, கைதிகள் மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகளை திரும்ப பெறுவது ஆகியவை அதில் அடங்கும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புடினுக்கு பைத்தியம் பிடித்து விட்டது..! கோபத்தில் கொந்தளிக்கும் ட்ரம்ப்.. 3ம் உலகப்போருக்கு அடிபோடுகிறதா அமெரிக்கா..!