நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ஆம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் அரசின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கிய ஜனாதிபதி உரையின் போதே காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகும் இந்த அமளி தொடர்ந்தது.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி ஆக்கப்பூர்வமான விவாதத்தை தடுத்தனர். உச்சக்கட்டமாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் பிரதமர் இருக்கை அருகே சென்று கோஷமிட்டனர்.
ரகசிய தகவலின் பேரில் பிரதமர் மோடி மீது சில எம்பிக்கள் தாக்குதல் திட்டமிட்டதாக தகவல் கிடைத்ததால், பிரதமரின் பதிலுரை இல்லாமலேயே அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் மக்களவை நேரத்தை எதிர்க்கட்சி வீணடிப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அதிருப்தி தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாட்டையே வித்துட்டாரு மோடி!! விளாசும் ராகுல்காந்தி! பிரதமர் பயப்படுகிறார்! இதானா விஷயம்?!!

இன்று காலை அவை தொடங்கியவுடன் யு-19 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட் விவாதம் தொடங்குவதற்கு முன்பே இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை காலை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 12 மணிக்கு அவை தொடங்கியபோதும் அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் இதேபோல் எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதம் கோரி முழக்கமிட்டனர். ஆனால் மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அதை மறுத்துவிட்டார். பின்னர் மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த தொடர் அமளியால் நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதங்கள் தடைபடுவதாகவும், பட்ஜெட் விவாதம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் நிலை ஏற்படலாம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகள் இதை “அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டம்” என்று கூறி வருகின்றன. நாடாளுமன்றத்தில் நிலவும் இந்த பதற்றம் மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!