நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் மொத்தம் 19 அமர்வுகள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடர், அடுத்த மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, மேற்காசிய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதால், நாடாளுமன்றத்தில் கடும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக, வருமான வரி சட்டத்திருத்த மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதா, தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதா மற்றும் பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட பல முக்கிய சட்ட முன்வரைவுகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
இதையும் படிங்க: அமித் ஷாவுக்கு துணை பிரதமர் பதவி..? மத்திய அமைச்சரவையில் வரும் அதிரடி மாற்றம்.!

கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற வேண்டும் என்பதற்காக, நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் மேற்கு வங்க அரசியல் சூழல் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது கவனத்தை ஈர்த்தது. மேலும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஜந்தர் மந்தரில் இருந்து அகற்றப்பட்ட விவகாரம், ராமர் கோவில் நன்கொடை குறித்த சர்ச்சை உள்ளிட்ட விஷயங்களையும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக எழுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனுடன், காங்கிரஸ்-திமுக கூட்டணி முறிவு, திரிணாமுல் காங்கிரசில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் போன்ற சமீபத்திய அரசியல் சூழல்களும் இந்த கூட்டத்தொடரின் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
மத்திய அரசின் புதிய சட்ட மசோதாக்களும், எதிர்க்கட்சிகளின் கடுமையான கேள்விகளும் நேருக்கு நேர் மோதவுள்ள நிலையில், இந்த மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை? மத்திய அரசு கொண்டுவரும் புதிய மசோதா!