பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக தொடர்ந்து பாமகவில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் பாமகவில் அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறார் ராமதாஸ். மருத்துவர் ராமதாஸ் கட்சியின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி அப்பொறுப்பில் சையத் மன்சூர் உசேனை நியமனம் செய்தார். தொடர்ந்து பல்வேறு மாவட்ட செயலாளர் மற்றும் தலைவர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். புதிய பொறுப்பாளர்கள் தைலாபுரம் இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று வரை 35 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 13 மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்து புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

நீக்கிய அனைவருக்கும் உடனடியாக பதவி வழங்கப்படும் என அன்புமணி ஒருபுறம் அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாமகவில் அப்பா - மகன் இடையிலான பிரச்சனை தொண்டர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ராமதாஸ் அவர்களுடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் குறிப்பாக அன்புமணி அவர்களுடைய சகோதரிகள் அவருடைய தாய் உள்ளிட்ட பலபேர் இருவருக்கும் இடையே சண்டை சச்சரவு வேண்டாம், தொடர்ந்து நீங்கள் ஒற்றுமை மையாக செயல்பட்டால் தான் கட்சி வளரும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு... தைலாபுரம் நோக்கி விரையும் அன்புமணி... ராமதாஸுடன் சந்திப்பு...!

மேலும் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ளது இது போன்ற நேரத்தில் கட்சியில் விரிசல் இருப்பது கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்புடையது அல்ல என தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தைகளை செய்து வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த கட்சியினுடைய முன்னாள் எம்எல்ஏக்கள், அன்புமணி உடைய ஆதரவாளர்கள், ராமதாஸுக்கு நெருக்கமான பாமக முக்கிய நிர்வாகிகளும் இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் நேரில் சந்தித்து பேசினால் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும் என ஜி.கே.மணி உள்ளிட்டோரும் கூட தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதில் உடன்பாடு எட்டிய நிலையில் இன்று காலை 7 மணி அளவில் சென்னை ஈசிஆர் அக்கரை பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் நோக்கி புறப்பட்டார். தற்போது தைலாபுரம் தோட்டம் வந்தடைந்துள்ள அன்புமணி பாமக நிறுவனரும், தனது தந்தையுமான ராமதாஸை சந்தித்துள்ளார். போட்டி பொதுக்குழு நடத்தி அன்புமணியை ராமதாஸ் கட்சியை விட்டு நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த சந்திப்பானது நடந்துள்ளது. தான் கொடுத்த செயல் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு, எனது தலைமையில் செயலாற்றினால் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு என ராமதாஸ் கூறியிருந்தார். தற்போது பல கட்ட சமரச பேச்சுவார்த்தைகளை அடுத்து இருவரும் சந்தித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வீழ்ச்சி அடைந்த மாம்பழ விலை... துயர் துடைக்காத தமிழக அரசை கண்டித்த அன்புமணி!!