புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் இடைக்காலமாக முடக்கியுள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்தையும், பா.ஜ.க.வையும் விமர்சித்து அவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக, கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னம் யாருக்கு உரியது என்பதில் இரு அணிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஒரு அணிக்கு மம்தா பானர்ஜியும், மற்றொரு அணிக்கு ரிதப்ரதா பானர்ஜியும் தலைமை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தரப்பும் தாங்களே உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என உரிமை கோரி வருகின்றன.
இந்த நிலையில், இறுதி முடிவு எடுக்கப்படும் வரை ‘அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரையும், கட்சியின் ‘பூக்கள் மற்றும் புல்’ தேர்தல் சின்னத்தையும் எந்த அணியும் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இரு அணிகளையும் சமநிலையில் வைத்திருப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் விஜய் கனவுக்கு சிபிஎம் செக்? ராகுல் காந்தியை முன்னிறுத்தி கூட்டணிக்குள்ளேயே எதிர்ப்பு? புதிய சிக்கல்?

மேலும், இரு அணிகளும் தங்களுக்கான புதிய பெயர்களையும், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சுயேச்சை சின்னங்களின் பட்டியலில் இருந்து தலா மூன்று சின்னங்களையும் தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இறுதி முடிவு எடுக்கப்படும் வரை இந்த இடைக்கால ஏற்பாடு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராகுல் காந்தி, சமூக வலைதளப் பதிவில், “முதலில் சிவசேனா, பின்னர் தேசியவாத காங்கிரஸ், இப்போது திரிணாமுல் காங்கிரஸ்” என குறிப்பிட்டுள்ளார். கட்சிகளை பிளவுபடுத்தி, பின்னர் அவற்றின் தேர்தல் சின்னங்களை பறிக்கும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரம் மம்தா பானர்ஜிக்கு மட்டும் தொடர்புடையது அல்ல என்றும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை விரும்பும் அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளர்கள் தொடர்புடைய விவகாரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இடைக்கால உத்தரவு காரணமாக நடைபெற உள்ள இடைத்தேர்தலில் இரு அணிகளும் வேறு பெயர் மற்றும் சின்னங்களில் களமிறங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களின் குரலை கேளுங்கள்!! மகாராஷ்டிர அரசுக்கு ராகுல் காந்தி வைத்த அதிரடி கோரிக்கை!