பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக தொடர்ந்து பாமகவில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்றும், பெற்ற தாயையே பாட்டிலால் தாக்க முயன்றார், நிர்வாகிகள் நியமனத்தில் அதிக கட்டுப்பாடு காட்டினார், கட்சியில் யாரையும் வளர விடாமல் கட்டுப்படுத்தினார் என்றெல்லாம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை ராமதாஸ் கடந்த வாரம் முன்வைத்திருந்தார்.

அதன் பின்னர் அன்புமணிக்கு ஆதரவாக கட்சியில் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகளை தினமும் மாவட்ட வாரியாக நீக்கி வருகிறார். இதுவரை மருத்துவர் ராமதாஸ் கட்சியின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி அப்பொறுப்பில் சையத் மன்சூர் உசேனை நியமனம் செய்தார். தொடர்ந்து பல்வேறு மாவட்ட செயலாளர் மற்றும் தலைவர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். புதிய பொறுப்பாளர்கள் தைலாபுரம் இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று வரை 35 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 13 மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்து புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

பதிலுக்கு அன்புமணி ராமதாஸ் சோழிங்க நல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தனது ஆதரவாளர்கள், பாமக எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நான் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட பாமக தலைவர் என்றும், அவ்வாறே செயல்படுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இதனால் பாமகவிற்குள் பெரும் குழப்பம் நீடித்து வந்தது.
இதையும் படிங்க: ராமதாஸை சந்தித்த இரு முக்கிய அரசியல் புள்ளிகள்... அன்புமணியின் திடீர் தைலாபுரம் விசிட்டின் பரபரப்பு பின்னணி...!
மேலும் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ளது இது போன்ற நேரத்தில் கட்சியில் விரிசல் இருப்பது கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்புடையது அல்ல என தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தைகளை செய்து வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த கட்சியினுடைய முன்னாள் எம்எல்ஏக்கள், அன்புமணி உடைய ஆதரவாளர்கள், ராமதாஸுக்கு நெருக்கமான பாமக முக்கிய நிர்வாகிகளும் இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் நேரில் சந்தித்து பேசினால் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும் என ஜி.கே.மணி உள்ளிட்டோரும் கூட தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் குடும்பத்தினரும், பாமக முக்கிய நிர்வாகிகளும் பல கட்ட முயற்சிக்குப் பிறகு இன்று அன்புமணி மற்றும் ராமதாஸை சந்திக்க வைத்தனர். தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனரும், தனது தந்தையுமான ராமதாஸை, பாமக தலைவர் அன்புமணி ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார். தைலாபுரம் வீட்டிற்குள்ளே அன்புமணி ராமதாஸ் சென்றதுமே கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. ராமதாஸ், அன்புமணி, அவரது இளைய மகள் சஞ்சுத்ரா, அன்புமணியின் தாயார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

பாமக நிர்வாகிகள் அனைவரும் கேட்டிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், பெரும்பாலானோர் காத்திருக்க முடியாது என்று கிளம்பிச் சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு நடந்த சமாதான பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியதாக கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் எவ்வளவு சொல்லியும் அன்புமணி, ராமதாஸ் அவர் அவரது பிடிவாதத்தில் விடாப்பிடியாக இருந்துள்ளனர். இதனிடையே ராமதாஸின் மூத்த மகளான காந்திமதி வீட்டிற்குள் நுழைந்ததும், அன்புமணியும் அவரது மகளும் சென்னைக்கு புறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த போது அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றனர். அப்போது இரு கைகளையும் குப்பி அன்புமணி ராமதாஸ் பெரிய கும்பிடு போட்டுவிட்டு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். இதனையடுத்து ராமதாஸ் உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த விரக்தியில் தான் அன்புமணி வேக வேகமாக புறப்பட்டுச் சென்றதாகவும், அவர் போட்ட கும்பிடு தைலாபுரத்திற்கு தான் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
இதையும் படிங்க: ராமதாஸ் வீடு முன்பு கட்சி நிர்வாகிகள் தர்ணா... பாமகவில் தொடரும் சலசலப்பு; என்னதான் நடக்குது?