ஈரான் - இஸ்ரேல் யுத்தம் தடுக்கப்படா விட்டால், அணு ஆயுத யுத்தமும், மூன்றாம் உலகப்போரும் தவிர்க்க முடியாதது ஆகிவிடும் எனவும் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டைக் கைவிட வேண்டும்., செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மைகள் வேண்டும் எனவும் கிருஷ்ணசாமி தெரிவித்தார். இது தொடர்பான அவரது பதிவில் ’நேட்டோவில் உக்ரைன் சேர்க்கப்படாது’ என்று அமெரிக்கா சொல்லி இருந்தால் ரஷ்யா - உக்ரைன் போர் மூண்டிருக்காது, ஹமாஸ் இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம்.,பாலஸ்தீனியர்களின் உரிமை பறிக்கப்படக் கூடாது என அமெரிக்கா இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியும், பாலஸ்தீனம் - இஸ்ரேல் இரு நாடு கொள்கையை அமெரிக்கா ஏற்றுக் கொண்டிருந்தாலுமே அங்குப் போர் மூண்டிருக்காது.

காசாவில் குழந்தைகள் உட்பட சாதாரண மக்கள் மீது ஈவிரக்கமற்று தாக்கி ஹேக் சர்வதேச நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட நேதன்யாகுவை அமெரிக்கா இன்று வரை பாதுகாத்து வருவதே அவரது ஆணவத்திற்கு காரணம். அதனால் தான் தன் இஷ்டத்திற்கு ஈரான் மீது போர் தொடுக்கிறார். ஈரானை போலவே இஸ்ரேலின் அணுசக்தி நிறுவனங்களுக்கும் முறையாக ஆய்வுக்கு உட்படுத்தவும், ஒருதலைப் பட்சமாக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படாமல் இருந்திருந்தால் இஸ்ரேல் - ஈரான் யுத்தமும் தொடர்ந்து இருக்காது.
இதையும் படிங்க: தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

ட்ரம்ப் சமாதானத்தை விரும்புவதைப் போலப் பேசுகிறார்; செயலில் அவ்வாறாக இல்லை. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மட்டுமே இருந்தது. மீண்டும் உலக யுத்தத்திற்கு முன்னோடியாக இப்பொழுது ஐரோப்பியா தொடர்ந்து உலகின் அனைத்துப் பகுதிகளிலும் யுத்தம் நடக்கிறது. அமெரிக்காவின் இருநிலை போக்குகள் உலகத்தை இரு கூறாக்குகிறது. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பதைப் போல ஈரானுக்கு மேற்கத்திய நாடுகளின் நட்பும் வேண்டும்; அதே சமயத்தில் மேற்கத்திய நாடுகளின் செல்லப் பிராணியான இஸ்ரேலுடன் போரும் வேண்டுமெனில் இவை சாத்தியமில்லை. ஈரான் ஐரோப்பிய நாடுகளை நம்பி மோசம் போகக் கூடாது; உண்மையான நட்பு நாடுகளை நம்பி களத்தில் நிற்க வேண்டும்.

புர்கா அணியாத பெண்களை அடித்து கொலை செய்யும் ஈரான் ஆட்சியாளர்களின் மனித நேயமற்ற போக்குகள் மாறவேண்டும். நிச்சயம் இஸ்ரேல் தாக்கும் என்று தெரிந்திருந்தும் ஈரானின் எதிர்வினைகள் சிறிதும் போதுமானது அல்ல. 1600 மைல் கடந்து வந்து இஸ்ரேலில் தாக்குகிறது என்றால் இத்தனை ஆண்டு கால ஈரானின் இராணுவ ஆயத்தம் என்ன ஆயிற்று? எனினும் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஏற்றுக் கொள்ள இயலாது.

உடனடியாக இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தப்பட வேண்டும். ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, வடகொரிய நாடுகள் களமிறங்குகின்றன; இவ்வளவு யுத்தம் முத்தியும் இஸ்லாமிய நாடுகளிடையே ஒற்றுமை இல்லை; ஓர் இஸ்லாமிய நாடு கூட ஈரானுக்கு உதவ முன் வரவில்லை. கடைசியில் கம்யூனிச நாடுகளே கைகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் - இஸ்ரேல் சமாதானம் ஏற்படாவிடில் அணு ஆயுத யுத்தமும், மூன்றாம் உலகப்போரும் தவிர்க்க இயலாததாகிவிடும்; ஆனால் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு குறித்த சர்ச்சை கருத்து... விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி!!