சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு சந்தேகத்தின்பேரில் இளைஞர் ஒருவரை பிடித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 11 கிராம் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், இதை வைத்திருந்த சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோவை கைது செய்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நுங்கம்பாக்கம் போலீஸார் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். மேலும் ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. இதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தனித்தனியே ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி தர்மேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 2 பேருக்கும் ஜாமின் வழங்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்களை சென்னை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் இருவர் தரப்பிலும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல் குமார் முன் திங்கள் கிழமை விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க: நடிகர்கள் ஶ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள் தான்.. இதுல வேற விஷயம் இருக்கு! சீமான் தடாலடி..!