சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நாளை (பிப்ரவரி 13, 2026) நடைபெறவுள்ள சிறப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்புகளையும், திட்டத் தொடக்கங்களையும் மேற்கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சி தமிழக அரசின் வேலைவாய்ப்பு, தேர்வு மேம்பாடு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் வகையில் அமையவுள்ளது.
முதல்கட்டமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) ஆகிய தேர்வு அமைப்புகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் நேரடியாக வழங்க உள்ளார். இந்த நியமனங்கள் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதோடு, இளைஞர்களுக்கு அரசுப் பணியில் நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் முயற்சியாகும்.

பல ஆண்டுகளாக தேர்வு எழுதி காத்திருந்தவர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்வாக இருக்கும். இதைத் தொடர்ந்து, சென்னை செனாய் பகுதியில் 62 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய கட்டடத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த மையம் 500 தேர்வர்கள் தங்கி பயிலும் வசதியுடன், நவீன வகுப்பறைகள், நூலகம், தங்கும் அறைகள், உடற்பயிற்சி மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: எச்.ராஜா எப்படி இருக்காரு..?? நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!
யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு தமிழக இளைஞர்களை தயார்படுத்துவதற்கு இது முக்கிய பங்காற்றும். மேலும், போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்களை எளிதில் பெறும் வகையில் 'தேர்வுக்களம்' என்ற புதிய கைபேசி செயலியை முதலமைச்சர் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த செயலியில் மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு அறிவிப்புகள், தேதிகள், சிலபஸ், முந்தைய வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
அனைத்து நடைமுறைகளும் மொபைலிலேயே எளிதாக மேற்கொள்ளும் வசதி இதில் உள்ளது. அரசு ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்காக, செயற்கை நுண்ணறிவு (AI), தரவு பகுப்பாய்வு (Data Analytics), திட்ட மேலாண்மை போன்ற நவீன துறைகளில் கட்டணமின்றி பயிற்சி பெற உதவும் இணையதளத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் அரசு ஊழியர்கள் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு, சேவைகளை இன்னும் திறம்பட வழங்க முடியும்.

இறுதியாக, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் 3 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட 3 அடுக்கு கட்டடத்தில் 8 குடியிருப்புகளை கொண்ட வசதியையும் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். இது கல்லூரி பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர், பல்வேறு அமைச்சர்கள், உயர் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழக அரசின் இத்தகைய தொடர் முயற்சிகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் நிர்வாக எளிமை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்..!! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்து..!!