தமிழகத்தில் தேர்தல் சூழல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திருச்சி மாவட்டம் அரசியல் ரீதியாக முக்கிய மையமாக மாறியுள்ளது. பல முக்கிய அரசியல் கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் திருச்சியின் மீது அரசியல் கட்சித் தலைவர்களின் கவனம் அதிகரித்துள்ளது.
கடந்த 9ம் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற்ற திமுகவின் 12வது மாநில மாநாட்டில், பிரம்மாண்டமான முறையில் பிரியாணி விருந்து வைக்கப்பட்டது. மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மட்டன் பிரியாணி, சிக்கன் 65 மற்றும் சைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்காக 20 ஆயிரம் கிலோ மட்டன், 80 ஆயிரம் கிலோ சிக்கன் என தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது.
இதனையடுத்து திருச்சியில் நேற்று நடைபெற்ற பிரதமர் மோடியின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில், 5 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி, தொண்டர்களுக்குத் தேவையான குடிநீர், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தன. முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், NDA கூட்டணித் தொண்டர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு..! தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்... தவெகவினர் கண்டன முழக்கம்..!!
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். பிரதமர் மோடி தலைமையிலான பொதுக்கூட்டத்தை நேரலையில் ஒளிபரப்பவும், செய்தி சேகரிக்கவும் நாடு முழுவதும் செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், யூடிப் சேனல்களில் இருந்து நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் திரண்டிருந்தனர்.
அவர்களுக்கும் பாஜக சார்பில் சிற்றுண்டி, உணவு, தண்ணீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அதில் காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விநியோகிக்கப்பட்ட பிஸ்கட் பாக்கெட்டுகளில் காலாவதி தேதி முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும், அதனை கவனிக்காமல் அலட்சியமாக வழங்கியிருப்பது அங்கிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது. காலாவதியான தேதியுடன் கூடிய பிஸ்கட் பாக்கெட்டுகளின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, இவ்வளவு பெரிய பொதுக்கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் காட்டப்பட்ட இத்தகைய அலட்சியம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: நொய்டா தொழிற்சாலையில் அதிகாலையில் தீ விபத்து!! சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்!! மீட்ப்புப்பணி தீவிரம்!