நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சல் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் அளவிற்கு டெங்கு காய்ச்சல் பரவியிருப்பதாகவும், அதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால் நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையும் வேதனையும் அளிப்பதாக சீமான் தெரிவித்தார்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சென்னையில் மட்டும் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போதுவரை மாநிலத்தில் 16,577 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நோய்த்தடுப்பு நடவடிக்கையையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது என்று அவர் கூறினார்.சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாக சீமான் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் தான் பங்கெடுப்பதாகவும் அவர் கூறினார்.மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பருவநிலை மாறுதல் காரணமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் வேகமாகப் பரவுவதாக அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக கொசுக்களின் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல், தலைநகர் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு நாளும் 300 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்படுவதால் மக்களிடத்தில் பயமும் பீதியும் ஏற்பட்டுள்ள நிலையில், நிகழும் உயிரிழப்புகள் அச்சத்தை இன்னும் அதிகமாக்குவதாக அவர் தெரிவித்தார். டெங்கு காய்ச்சலிலிருந்து தங்களைத் தற்காக்க முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை பறிப்பதா.? இதுதான் ஜனநாயகன் ஆட்சியா.? விளாசிய சீமான்..!!
டெங்கு பாதித்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கியுள்ள நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாமல் தமிழ்நாடு சுகாதாரத்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்று சீமான் கேள்வி எழுப்பினார். மிக மெத்தனமாக செயல்பட்டு மக்களின் உயிரோடு விளையாடும் சுகாதாரத்துறையின் அலட்சிய அணுகுமுறை நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என்று அவர் குற்றம்சாட்டினார்.தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தி, அதனால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க, சுகாதாரத்துறை இனியாவது விழித்துக்கொண்டு சிறப்பு மருத்துவர் குழுவை அமைத்து, டெங்கு குறித்த விளக்கங்களையும், முன்னெச்சரிக்கை தகவல்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் உடனடியாக வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!