தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை முடிந்து அரசுப் பள்ளிகள் (ஜூன் 2) நாளையும், தனியார் பள்ளிகள் ஜூன் 5-ம் தேதியும் திறக்கப்பட உள்ளன. இதனால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் அங்கிருந்து தாம் பணி புரியும் மாவட்டங்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். ரயில்களில் முன்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில் பெரும்பாலானோர் தத்கால் மூலம் பயணச்சீட்டு பெற முயற்சிக்கும் முடிவில் இருக்கின்றனர். மேலும் சிலர் தனியார் பேருந்துகளையும் நாடுகின்றனர்.

பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதேபோல, தனியார் ஆம்னி பேருந்துகளும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலும் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தங்களது சொந்த ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அதிகளவில் வருகை தருவர். இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஏராளமானோர் ஊர் திரும்பும் சூழலை பயன்படுத்தி, வழக்கம்போல ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: விமானத்தில் இவ்வளவு பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.. லிமிட் எவ்வளவு?

அதன்படி, சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு ஆம்னி பேருந்துகளில் சாதாரண நாள்களில் ரூ.1,150 முதல் ரூ.1,400 வரை இருக்கும். ஆனால், தற்போது, ரூ.2,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வழக்கமாக வார இறுதி நாள்களில் கோவையிலிருந்து, சென்னை வருவதற்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். தற்போது அதன் விலையும் ரூ.2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் என தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து சென்னை திரும்பும் அனைத்து ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குழந்தைகளுடன் சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

ஒரு நபருக்கு சுமார் ரூ.1,000 வரை டிக்கெட்டின் விலை இருக்கும் நிலையில், தற்போது அதையும் தாண்டி கூடுதலாக ரூ.1,000 கொடுத்து ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை உயர்த்தப்படுவது தொடர்பாக அரசுக்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ள நிலையில், தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: நாங்க யாருக்கும் துரோகம் பண்ணல...4 வருஷ திமுக ஆட்சி தான் துரோக ஆட்சி! இபிஎஸ் சாடல்