நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள அரசுப் பள்ளியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட 50 வயதான அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 23 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு அரசுப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர். இந்தச் சம்பவம், பள்ளியில் காவல்துறையினர் நடத்திய குட் டச், பேட் டச் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது வெளிச்சத்துக்கு வந்தது. ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர், செந்தில்குமார் தனக்கு உடலின் தகாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, மேலும் 20 மாணவிகள் ஒரே மாதிரியான புகார்களை முன்வைத்தனர்.

இதையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி, ஆசிரியரை கைது செய்தனர். மேலும், நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவின்படி, செந்தில்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் உள்ளூர் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக கண்டித்துள்ளார். அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்திகள் மனதை உலுக்குவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

மாணவிகள் புகார் அளித்த பின் தற்போது ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுவிட்டது சிறு ஆறுதல் அளித்தாலும், பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை எனும் கசப்பான உண்மை மனதை வாட்டி வதைப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். படிக்கும் மாணவச் செல்வங்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் தைரியம் அந்த ஆசிரியருக்கு எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பிய அவர், திமுக ஆட்சியில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கால் குற்றங்களின் கூடாரங்களாக பள்ளிக்கூடங்களே மாறி வரும் அவல நிலை மிகவும் கொடூரமானது என்று கூறினார்.

நான்காண்டு ஆட்சியின் விளம்பரங்களில் மட்டும் ஆர்வம் காட்டும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் நாளைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க வல்ல பள்ளிக்கூடங்களில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: நீலகிரி மக்களே உஷார்..!! அடுத்த 2 நாட்களுக்கு வெளுக்கப்போகுது மழை..!