சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த விலையில் தங்கக் காயின் வழங்குவதாகக் கூறி சுமார் 20 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் பதிவான வழக்கில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு தண்டையார்பேட்டை காவல் நிலையத்திலும், பின்னர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் ஆய்வாளராக பணியாற்றியபோது, பலரிடம் குறைந்த விலையில் தங்கக் காயின் பெற்றுத் தருவதாக ஆசைவார்த்தை கூறி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் அவரது ஓட்டுநரும் உடந்தையாக செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசடி தொகை 20 கோடி ரூபாயை கடந்ததால், இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: தவெக நிகழ்ச்சியில் அவலம்..! எச்சில் இலைகளை அள்ளிய தூய்மை பணியாளர்கள்..! நயினார் கண்டனம்.!!
இதையடுத்து, சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அவரது ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அந்த விசாரணையின் மூலம் இந்த மோசடிக்குத் திட்டமிட்டு செயல்பட்டது ஆய்வாளர் ஷீலா மேரி என்பதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
மேலும், திருவொற்றியூர், ராயபுரம், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய காலங்களிலும் இதேபோன்ற முறையில் காவல்துறையினரிடம் பணம் பெற்று மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே பணியிட நீக்கம் செய்யப்பட்டிருந்த ஷீலா மேரியை, நேற்று இரவு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது சென்னை கே.கே. நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணையின்போது, மோசடி மூலம் பெற்ற பணத்தில் திருமண மண்டபம் மற்றும் பல்வேறு அசையா சொத்துகளை வாங்கியிருப்பதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், சொத்துக்கள் தொடர்பாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நானே அரசு பள்ளி மாணவி தான்..! கிண்டல் பண்றது EASY..! ஆனால்... அமைச்சர் கீர்த்தனா பதிலடி..!!