நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அறப்போராளி சோனம் வாங்சுக்குடன் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அவரது உடல் நலனை உறுதி செய்வதோடு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில், கடந்த 18 நாட்களுக்கும் மேலாக உணவு உட்கொள்ளாமல் தனது உடலை வருத்தி, லடாக் மண்ணின் கல்விப் புரட்சியாளரும், சூழலியல் அறிஞருமான மதிப்புக்குரிய சோனம் வாங்சுக், சாவின் விளிம்பில் நின்று அறப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.
ஒரு நாட்டின் எதிர்காலமாகத் திகழக்கூடிய கோடிக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்து மாணவர்களின் கல்வி உரிமையைக் காப்பதற்காக, தன்னுயிரைத் துச்சமென மதித்து அவர் மேற்கொண்டு வரும் இந்த உண்ணாநிலை அறப்போர், ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தின் ஆன்மாவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது என்றார். ஆனால், இந்த நாட்டின் ஆளும் வர்க்கமோ எவ்வித சலனமும் இன்றி, ஒரு மனிதனின் உயிர் போகும் நிலையைக் கண்டும் காணாமல் மௌனம் சாதிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அம்பேத்கர் சிலை திறப்பு சிக்கல்..! இதைக் கூடவா செய்ய முடியல..? தவெகவை பந்தாடிய சீமான்..!!

நீட் அநீதிக்கு எதிராகவும், வினாத்தாள் வெளியீட்டிற்குப் பொறுப்பேற்று மத்திய பாசக அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும்தான், டெல்லியில் போராடும் இளம்தலைமுறையினரோடு கைகோர்த்து சோனம் வாங்சுக் களம் கண்டுள்ளார் என கூறினார். இனியும் காலங்கடத்தாமல், ஜந்தர் மந்தரில் போராடி வரும் சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் நீட் போன்ற ஆதிக்கத் தேர்வு முறைகளை முற்றிலும் கைவிட்டு, வினாத்தாள் வெளியீட்டிற்குக் காரணமானவர்கள் மீதும், அதற்குப் பொறுப்பான கல்வி அமைச்சகத்தின் மீதும் கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
கல்வி என்பது வர்த்தகப் பண்டமல்ல அது எளிய மக்களின் வாழ்வாதார உரிமை என்று கூறிய சீமான், உண்ணாநிலை போராட்ட முறையை கைவிட வேண்டும் எனும் கோரிக்கையோடு நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காக்கப் பாடுபடும் சோனம் வாங்சுக் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்குகிறது என்று கூறினார்.
இதையும் படிங்க: வந்தே மாதரத்தை எதிர்க்காதது ஏன்.? அத்துமீறும் மத்திய அரசு... அமைதி காக்கும் தவெக.. சீமான் காட்டம்..!!