திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய வைபவங்களில் ஒன்றான ஆனிவார அஸ்தானம் இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இந்த சிறப்பு விழாவையொட்டி, தமிழ்நாடு ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரத்தை, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சமர்ப்பித்தார். பின்னர் அந்த பட்டு வஸ்திரம் ஏழுமலையான் மூலவருக்கும் உற்சவர்களுக்கும் அணிவிக்கப்பட்டது.
சூரிய நாட்காட்டியின்படி தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும் கடக சங்கராந்தி நாளே தமிழ்க் காலண்டரின்படி ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கும் நாளாகும். இதனையொட்டி நடைபெறும் ஆனிவார அஸ்தானம், திருமலை கோயிலில் பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய விழாவாகும். பழங்காலத்தில் இந்த நாளில் கோயிலின் ஆண்டு வரவு–செலவு கணக்குகள் நிறைவு செய்யப்பட்டு புதிய கணக்குகள் தொடங்கப்பட்டன. தற்போது நிர்வாக நடைமுறைகள் மாற்றப்பட்டிருந்தாலும், இந்த வைபவம் ஆன்மிக மரபாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று நடைபெற்ற விழாவில், நித்ய பூஜைகள் நிறைவடைந்த பிறகு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கருட மண்டபத்திற்கு எழுந்தருளி, சர்வபூபால வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல் விஸ்வக்சேனருக்கும் சிறப்பு மரியாதைகள் செய்யப்பட்டன. ஜீயர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் மூலவருக்கும் உற்சவர்களுக்கும் சிறப்பு பூஜைகள், நைவேத்தியங்கள் மற்றும் வேத பாராயணங்களை நடத்தினர்.
இதையும் படிங்க: 65+ மூத்த குடிமக்களே கவனம்..!! திருப்பதி தரிசன விதிகளில் புதிய அப்டேட்..!!
திருமலை மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் ஆன்மிக பாரம்பரியத்தின் அடையாளமாக, இரு கோயில்களும் முக்கிய உற்சவங்களின் போது பரஸ்பரம் பட்டு வஸ்திரங்களை வழங்குவது வழக்கமாக உள்ளது. அந்த மரபின் அடிப்படையிலேயே இந்த ஆண்டும் ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரம் திருமலையில் சமர்ப்பிக்கப்பட்டது.
மாலை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் புஷ்ப பல்லக்கில் நான்கு மாடவீதிகளிலும் வீதி உலா வந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆனிவார அஸ்தானத்தை முன்னிட்டு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை மற்றும் வி.ஐ.பி. தரிசனம் ஆகியவை அன்று ரத்து செய்யப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது. இந்த ஆன்மிக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் “கோவிந்தா... கோவிந்தா...” என பக்தி முழக்கமிட்டு ஏழுமலையானை தரிசித்தனர்.
இதையும் படிங்க: பிரசவ அறையில் கூடவா..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வில் அதிரடி..!!