தமிழக அரசியலில் மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது அடுத்தகட்ட அதிரடி நகர்வை மேற்கொண்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் திரு. விஜய் அவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான முக்கிய நிர்வாகிகள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக விழா வரும் மார்ச் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே பெரம்பூர் பகுதியில் பாதுகாப்பு மற்றும் இடநெருக்கடி காரணமாக விஜய்யின் பிரசாரத்திற்குத் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்திருந்த நிலையில், தற்போது இந்த முக்கியமான உள்கட்சி கூட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் மார்ச் 29 காலை 11 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தின் 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 தொகுதிகள் என மொத்தம் 264 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தலைவர் விஜய் அவர்கள் முறைப்படி அறிமுகம் செய்து வைக்கிறார். தவெக வேட்பாளர்கள் அனைவரும் கட்சியின் வெற்றிச் சின்னமான 'விசில்' சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க: சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!
தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு இது ஒரு உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட 500 பேருக்கு மட்டுமே இதில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான உண்மையான ஜனநாயக அரசியலைத் தவெக முன்னெடுத்து வருகிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் திமுக தலைமையிலான கூட்டணிகள் ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், விஜய்யின் இந்த வேட்பாளர் அறிமுக விழா, தமிழக மற்றும் புதுச்சேரி தேர்தல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக வேட்பாளர்கள் இருவர் மாற்றம்! நேயம் மக்கள் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!