திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள எளமணம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடை அகற்றக்கோரி அப்பகுதி பொண்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடையை அகற்றாததால் கண்ணூத்து, குப்பானூர், எளமணம் சீத்தப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் தமிழர் தேசம் கட்சியினருடன் சேர்ந்து இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் கண்ணூத்து பிரிவு சாலையில் இருந்து பொதுமக்கள் முழக்கங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர். சிறிது தூரத்தில் போராட்டம் நடத்த சென்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் டாஸ்மாக் கடை பகுதிக்குச் செல்ல அனுமதி மறுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை மனுவாக அளித்தால் அதனை பரிசீலனை செய்து இரண்டு மாதத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக மருங்காபுரி வட்டாட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் டிஎஸ்பி காவியா ஆகியோர் உறுதியளித்தனர்.
இந்நிலையில் மணப்பாறை உட்கோட்டத்தில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாகவும் அது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மதுக்கடையை அகற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் எனவும் பெண்கள் தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சீனாவில் அறுந்து விழுந்த தொங்குப்பாலம்.. 5 பேர் பலி.. 24 பேர் படுகாயம்..!!
இதையும் படிங்க: சுதந்திர தின விடுமுறை.. சிறப்பு ரயில்கள் அறிவித்த தெற்கு ரயில்வே..!!