இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை (20.06.2025) தொடங்கவுள்ளது. இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி ஐந்து நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டியில் விளையாட உள்ளது.

இது 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் முதல் தொடர். இந்தப் போட்டியின் ஒவ்வொரு நாளும் இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்குத் துவங்கும் என்றும் இரவு 10:30 மணி வரை போட்டிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் டாஸ் போடும் நிகழ்வு மதியம் 3:00 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தப் போட்டியை இணையதளம் மற்றும் மொபைலில் பார்க்க விரும்புபவர்கள் ஜியோ சினிமா (JioCinema) செயலி மற்றும் இணையதளத்தில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூர் அணி... தொடரை வெல்லுமா பஞ்சாப் அணி!!

இந்தப் போட்டிகள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (Sony Sports Network) தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்திய அணியின் பிளேயிங் லெவன் போட்டி தொடங்கும் முன் அறிவிக்கப்படும்.

இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டோங், பிரைடன் கார்ஸ், ஷோயப் பஷீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவனில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), கருண் நாயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய இறுதிபோட்டி... டாஸ் வென்றது பஞ்சாப் அணி; கோப்பை யாருக்கு?