நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நடைபெற்று வரும் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அங்கு வந்து செல்கின்றனர்.
பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு சிறப்பு பேருந்து விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாங்கண்ணியில் இருந்து இன்று (செப். 6) 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சிறப்பு அரசு பேருந்து திருச்சி நோக்கி புறப்பட்டதாக கூறப்படுகிறது. பேருந்து தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை நான்குவழிச்சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: வேளாங்கண்ணி பெருவிழா... நாகைக்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!
இதையடுத்து சாலையோரம் சென்ற பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கவிழ்ந்ததில் உள்ளே இருந்த பயணிகள் அலறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், சிறப்பு பேருந்து கவிழ்ந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரின் கட்டுப்பாடு எதனால் தவறியது, பேருந்தின் வேகம் மற்றும் சாலையின் நிலை உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வேளாங்கண்ணி கொடியேற்றத்தில் பயங்கரம்... வெடித்து சிதறிய பகீர் காட்சிகள்... பதறிய மக்கள்...!