ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்ததாகக் கூறப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நலமுடன் இருப்பதாக ஈரான் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் உச்ச தலைவர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி அயதுல்லா மொஹ்சென் கோமி இதுகுறித்து பேசுகையில், “தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் மொஜ்தபா கமேனி கட்டடத்தின் முற்றத்துக்கு சென்றிருந்ததால் உயிர் தப்பினார். அவரது உடல்நலம் குறித்து பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. அவர் நலமாக இருக்கிறார். பொது வெளியில் வராவிட்டாலும், நாட்டின் அன்றாட விவகாரங்கள், முக்கிய பேச்சுகள் மற்றும் கள நிலவரங்களை அவர் நேரடியாக கண்காணித்து வருகிறார். அமைதிப் பேச்சுக்கான குழுவுக்கு தேவையான ஆலோசனைகளையும் உத்தரவுகளையும் அவர் பிறப்பித்து வருகிறார்” என்றார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் “மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா என்றே தெரியவில்லை” என்று கூறியிருந்த நிலையில், ஈரான் தரப்பில் இருந்து வந்துள்ள இந்த உறுதிப்படுத்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்கா இல்லாத பாரசீக வளைகுடா தான் எங்கள் எதிர்காலம்! ஈரான் உச்ச தலைவர்மொஜ்தபா சூளுரை!

கோமி மேலும் கூறுகையில், “இத்தகைய வதந்திகளை எதிரிகள் பரப்பி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் சதித்திட்டங்களை முன்னெடுக்க முயல்கின்றனர். ஆனால் மொஜ்தபா கமேனி நாட்டின் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்” என்று தெரிவித்தார்.
ஈரான் மீதான தாக்குதல் தொடங்கிய பிறகு மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து பல்வேறு ஊகங்கள் பரவி வந்தன. சில தகவல்கள் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் இருப்பதாகவும், சில தகவல்கள் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஈரான் அதிகாரி இப்போது பதிலளித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா இடையேயான பதற்றம் தொடரும் நிலையில், மொஜ்தபா கமேனியின் உடல்நிலை உறுதிப்படுத்தல் ஈரான் தரப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமைதிப் பேச்சு முயற்சிகள் தொடரும் சூழலில் இந்த தகவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் உச்ச தலைவர் உயிரோடு தான் உள்ளார்!! ஆனால்! வான்வழி தாக்குதலில் பலத்த காயம் அடைந்தார் மொஜ்தபா!!