அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையே இன்று அதிகாலை நடைபெற்றத் தொலைபேசி உரையாடல், உலகப் பொருளாதார மற்றும் அரசியல் வரைபடத்தையே மாற்றியமைக்கும் ஒரு வரலாற்று ஒப்பந்தத்தில் முடிந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த வர்த்தக மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், உடனடியாக அமலுக்கு வரும் ஒரு பிரம்மாண்ட வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பின்படி, இந்த ஒப்பந்தத்தின் படி, கடந்த 2025 ஏப்ரலில் இந்திய ஏற்றுமதிப் பொருட்களின் மீது அமெரிக்கா விதித்திருந்த 25% பரஸ்பர வரியை (Reciprocal Tariff), உடனடியாக 18% ஆகக் குறைக்க டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்குப் பதிலாக, அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளை ‘பூஜ்ஜியம்’ நிலைக்குக் கொண்டு வரப் பிரதமர் மோடி சம்மதித்துள்ளார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் டிரம்பின் திட்டத்திற்கு ஆதரவாக, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு மாற்றாக, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் எரிசக்தி மற்றும் எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யும்.
இதையும் படிங்க: எங்களை சீண்டினால் பிராந்திய போராக மாறும்! அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கடும் எச்சரிக்கை!
500 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம்: ‘பை அமெரிக்கன்’ (Buy American) கொள்கையின் கீழ், சுமார் 500 பில்லியன் டாலர் (சுமார் 455 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயப் பொருட்கள் மற்றும் நிலக்கரியை வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது.
பிரதமர் மோடி எனது மிகச்சிறந்த நண்பர்; அவர் காரியங்களைச் சாதிப்பதில் வல்லவர். இந்த ஒப்பந்தம் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவும்" என்று டிரம்ப் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காகவும் பிற வர்த்தகக் காரணங்களுக்காகவும் இந்தியா மீது அமெரிக்கா 50% வரை (25% அடிப்படை + 25% ரஷ்ய எண்ணெய் அபராதம்) கூடுதல் வரி விதித்திருந்தது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வந்தனர். இந்தச் சூழலில், கடந்த வாரம் (ஜனவரி 27) இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இந்தியாவுடன் கைகோர்த்திருப்பது சர்வதேச அரசியலில் இந்தியாவின் வலிமையை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டிரம்பின் மாஸ்டர் பிளான்: காசா "அமைதி வாரியத்தில்" இணைய இந்தியாவுக்கு அழைப்பு!