இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த மே 22 ஆம் தேதி 257 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 26 ஆம் தேதி ஆயிரத்தை கடந்து 1,010 ஆக உயர்ந்தது. அதை தொடர்ந்த் இன்று 3 ஆயிரத்தை கடந்து 3,395 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 685 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உள்ளது.

மத்திய அரசு தகவலின் படி, இந்தியாவில் தற்போது மொத்தம் 3,395 பேர் கோவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 1,336 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 467 பேர் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் 375 பேரும், குஜராத்தில் 265 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் மேற்கு வங்காளத்தில் 205 பேரும், தமிழகத்தில் 185 பேர், உத்தரபிரதேசத்தில் 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 1,435 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தீவிரவாதிகளை ஆதரித்தால் பதிலடி கடுமையாக இருக்கும்.. பிரதமர் மோடி எச்சரிக்கை!!

கர்நாடகத்தை பொறுத்தவரை நேற்று 460 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 114 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த ஆண்டு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. அங்கு தற்போது 234 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 27 பேர் சிகிச்சையில் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார்.

மைசூருவை சேர்ந்த 63 வயதாகும் அவர், 2 கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், கோவிட் தொற்று பாதித்த பெரும்பாலான நோயாளிகள் லேசான பாதிப்பு உடையர்கள் என்றும், பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும் வலியுறுத்தினர். நாடு முழுவதும் போதுமான பரிசோதனை மற்றும் சிகிச்சை உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த கோவிட் தொற்று ஓமிக்ரானின் துணை வகை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போரை நிறுத்தியது யார்.? பொய் சொல்வது மோடியா, ட்ரம்ப்பா.? காங்கிரஸ் கட்சி ஆவேசம்!