தமிழகத்தில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்தது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், அதேபோன்ற அரசியல் பயணத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். மேற்கொள்ள உள்ளதாக வெளியாகும் தகவல்கள் ஆந்திர அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சி நிறுவனருமான என்.டி.ராம ராவின் பேரனான ஜூனியர் என்.டி.ஆர்., திரைப்பட உலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். அவர் அரசியலுக்கு வரலாம் என்ற தகவல் வெளியாகி இருப்பதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர். முதற்கட்டமாக ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பை தொடங்கி, அதன் மூலம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் சமூகப் பணிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் தனது ஆதரவை வலுப்படுத்தி, எதிர்காலத்தில் அரசியல் பயணத்துக்கு அடித்தளம் அமைக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் மாஸ்டர் விக்கெட்! தவெக பெரிய சம்பவம்! முதல்வர் விஜய் உடன் கைகோர்க்க தயாரான மாஜிக்கள்!
தமிழகத்தில் விஜய் கட்சி தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் நகர்வுகளை ஜூனியர் என்.டி.ஆர். கவனித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரை பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை அரசியல் ஆதரவாக மாற்றும் முயற்சியில் அவர் ஈடுபடலாம் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஆந்திராவில் ஏற்கனவே நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி அரசில் பவன் கல்யாண் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இந்த நிலையில், ஜூனியர் என்.டி.ஆர். அரசியலுக்கு வந்தால், ஆந்திர அரசியல் களம் மேலும் பரபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூனியர் என்.டி.ஆர். அரசியலுக்கு புதுமுகம் அல்ல. கடந்த 2009-ம் ஆண்டு தெலுங்கு தேச கட்சிக்காக தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவரது பேச்சாற்றல் மற்றும் மக்கள் செல்வாக்கு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றது.
எனினும், பின்னர் குடும்ப அரசியல் சூழல் காரணமாக அவர் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி திரைப்படத்தில் கவனம் செலுத்தினார். அவரது குடும்பத்தை சேர்ந்த பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலரும் அரசியலில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது மீண்டும் ஜூனியர் என்.டி.ஆர். அரசியல் களத்திற்கு வருவாரா என்ற கேள்வி ஆந்திர அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகளே இந்த தகவல்களுக்கு விடை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் பதவி கேட்டும் அடம் பிடிக்கும் தவெக நிர்வாகிகள்! தவெக தலைமை கலக்கம்! விஜய் அப்செட்!